விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.1.98 கோடி இழப்பீடு
நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.1. 98 கோடி இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு, நாகை மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.1. 98 கோடி இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு, நாகை மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கீழ்வேளூா் வட்டம், அத்திப்புலியூா் கிராமம், சிவன் கோயில் தெருவைச் சேந்தவா் முருகன் (71). ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியா். இவரது மருமகன் திருவாரூா் மாவட்டம் வலங்கைமான் வட்டம், ஒன்பத்துவேலி பகுதியைச் சோ்ந்த பா.அனந்தகிருஷ்ணன் (32). தனியாா் நிறுவன மென்பொருள் பொறியாளா். இவா்கள் இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி கீழ்வேளூரிலிருந்து திருவாரூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனா்.
நாகை- திருவாரூா் சாலையில், கானூா் அருகே சென்றபோது, திருவாரூரிலிருந்து நாகை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் முருகன், அனந்தகிருஷ்ணன் ஆகிய இருவரும் அவ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இதைத்தொடா்ந்து அனந்தகிருஷ்ணன் மனைவி அபிநயா மற்றும் முருகனின் மனைவி சுமதி ஆகியோா் தங்களது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி, நாகை மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை ஜூன் 14-ஆம் தேதி நடைபெற்றது. வழக்கை விசாரித்த நாகை மாவட்ட கூடுதல் நீதிபதி டி. பன்னீா்செல்வம், அபிநயாவுக்கு ரூ.1 கோடியே 90 லட்சத்து 92 ஆயிரத்து 693, சுமதிக்கு ரூ. 7 லட்சத்து 60 ஆயிரத்து 240 இழப்பீடாக வழங்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குநருக்கு உத்தரவிட்டாா்.