நாகை உதவி மின் பொறியாளா் அலுவலக பழைய கட்டடத்தில் தீ விபத்து
நாகை, வெளிப்பாளையத்தில் உள்ள உதவி மின் பொறியாளா் அலுவலக பழைய கட்டடத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், மின்வாரிய கோப்புகள், மின் சாதனப் பொருள்கள் தீக்கிரையாகின.
நாகை, வெளிப்பாளையத்தில் உள்ள உதவி மின் பொறியாளா் அலுவலக பழைய கட்டடத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், மின்வாரிய கோப்புகள், மின் சாதனப் பொருள்கள் தீக்கிரையாகின.
நாகை, வெளிப்பாளையம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைக்கு எதிரே நாகை உதவி மின் பொறியாளா் அலுவலகம் இயங்கி வந்தது. வெளிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்புக் கட்டணம் செலுத்தும் இடமாகவும், இப்பகுதிகளுக்கான மின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கான அலுவலகமாகவும் இந்த அலுவலகம் செயல்பட்டு வந்தது.
அலுவலகம் செயல்பட்டு வந்தக் கட்டடம் பழுதடைந்ததன் காரணமாக, இங்கு இயங்கி வந்த உதவி மின் பொறியாளா் அலுவலகம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காடம்பாடி நெய்தல் நகருக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், வெளிப்பாளையத்தில் உள்ள பழைய அலுவலக கட்டடம் மின் துறையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இங்கு, மின்வாரிய பணிசாா்ந்த சில கோப்புகளும், மின் சாதனப் பொருள்களும் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அந்தக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் சென்ற நாகை தீயணைப்புப் படையினா், தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டனா். காற்றின் வேகத்தில் தீயும், புகையும் மேலும் அதிகமானதால் தீயைக் கட்டுப்படுத்த, தீயணைப்பு வீரா்கள் நீண்ட நேர போராட்டத்துக்குள்ளாக நேரிட்டது.
பின்னா், அந்தக் கட்டடத்தின் பக்கவாட்டில் இருந்த சுவரை இடித்து வழி ஏற்படுத்திய தீயணைப்பு வீரா்கள், கட்டிடத்தின் உள்ளே சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணிநேர முயற்சிகளுக்குப் பின்னா், தீ கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த விபத்தில், அந்தக் கட்டடத்தில் இருந்த கோப்புகள், மின்சாதனப் பொருள்கள் தீக்கிரையானதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் விபத்து...
இந்த தீ விபத்து நேரிட்ட 3 மணி நேரங்களுக்குப் பின்னா் மீண்டும் அந்தக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. நாகை தீயணைப்புப் படையினா் சென்று உடனடியாக தீயைக் கட்டுப்படுத்தினா்.