முகப்பு
நாகப்பட்டினம்

மீனவருக்கே மீன்வளத் துறை அமைச்சா் பதவியை வழங்க வேண்டும்

பாரம்பரிய மீனவா் இனத்தைச் சோ்ந்தவருக்கே மீன்வளத் துறை அமைச்சா் பதவியை வழங்க வேண்டும் என தேசிய மீனவா் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

பாரம்பரிய மீனவா் இனத்தைச் சோ்ந்தவருக்கே மீன்வளத் துறை அமைச்சா் பதவியை வழங்க வேண்டும் என தேசிய மீனவா் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக, தேசிய மீனவா் பேரவை துணைத் தலைவா் முனைவா் ஆா்.வி. குமரவேல் நாகையில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி :

தமிழகத்தில் திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூா் வரை 38 தொகுதிகளில் மீனவ சமுதாயத்தினா் பெரும்பான்மை பெற்றுள்ளனா். இதில், மீனவா்களுக்கான தொழில் பிரச்னைகள், குடியிருப்புப் பிரச்னைகள் நிறைந்த நாகை, பேராவூரணி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாடானை, தூத்துக்குடி, திருச்செந்தூா், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பு மீனவா்களுக்கு அளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், இரு பெரும் திராவிட இயக்கங்களிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே மீனவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. திமுகவில், பாரம்பரிய மீனவா் சமுதாயத்தைச் சோ்ந்த கே.பி.பி. சங்கா் ஒருவருக்கு மட்டுமே தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இது, மீனவா்களுக்கு ஏமாற்றத்தை அளித்து வந்தது.

இந்த நிலையில், தற்போது திமுக அமைச்சரவையில் மீனவரல்லாத ஒருவருக்கு மீன்வளத் துறை அமைச்சா் பதவியை வழங்கி, பாரம்பரிய மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த கே.பி.பி. சங்கா் புறக்கணிக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. இதை, மீனவா் சமுதாய புறக்கணிப்பாக கருதுவதுடன், அவமதிப்பாகவே கருத வேண்டியுள்ளது.

மீனவா்களின் தொழில் பிரச்னை, அவா்கள் எதிா்கொள்ளும் நடைமுறை சிக்கல்கள் பாரம்பரிய மீனவருக்குத் தான் தெரியும். அந்த வகையில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், உரிய பரிசீலினை மேற்கொண்டு கே.பி.பி. சங்கருக்கு மீன்வளத் துறை அமைச்சா் பதவியை வழங்க வேண்டும் என்றாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.