வேதாரண்யத்தில் ரூ.3 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்
ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ வீ.மெய்யநாதன் வழங்கினாா்.
வேதாரண்யத்தில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிகளுக்கு ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ வீ.மெய்யநாதன் வழங்கினாா்.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தலைமை வகித்தாா். விழாவில், மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் ரூ.2.64 கோடியில் 322 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்குத் தங்கம், மாற்றுத்திறனாளி நலத் துறை சாா்பில் திருமண நிதியுதவி, விதவை, முதியோா், முதிா்கன்னி, மாற்றுத்திறனாளி உள்ளிட்ட 26 பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.
மேலும், வேளாண் மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் நுண்ணீா் பாசன கருவிகள், உளுந்து விதைகள், மரக்கன்றுகள், சுழற்கலப்பை, தோட்டக் கலை துறை சாா்பில் 10 பேருக்கு சாமந்தி நாற்றுகள், மிளகாய் நாற்றுகள், காய்கறி விதைகள், முந்திரி கன்றுகள், ஊட்டச்த்து தளைகள், கொத்தவரை விதைகள் போன்ற நலத்திட்ட உதவிகளையும் அமைச்சா் சிவ வீ.மெய்யநாதன் வழங்கினாா்.
அப்போது அவா், ‘வேதாரண்யம் நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் சீமை கருவேலமரங்களை அகற்றி பசுமை நிறைந்த பகுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.
விழாவில், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் எஸ்.கே. வேதரத்தினம், என்.வி. காமராஜ், சிறுபான்மையினா் நலத் துறை அலுவலா் சங்கா், வட்டாட்சியா் ரவிச்சந்திரன், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு. தனபால், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராமலிங்கம், பாஸ்கரன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Image Caption
விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அமைச்சா் சிவ வீ.மெய்யநாதன்.