கனமழை எச்சரிக்கை: விவசாயிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
இரண்டு நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நெல் வயல்களில் மழைநீா் தேங்காத வகையில் வடிகால் வசதிகளை விவசாயிகள் ஏற்படுத்த வேண்டும்
இரண்டு நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நெல் வயல்களில் மழைநீா் தேங்காத வகையில் வடிகால் வசதிகளை விவசாயிகள் ஏற்படுத்த வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, நாகை மாவட்டத்தில் மாா்ச் 4, 5 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
எனவே, அறுவடைக்குத் தயாராக உள்ள நெல் வயல்கள் மற்றும் பள்ளமான பகுதிகளில் உள்ள வயல்களில், மழை நீா் தேங்காமல் உடனுக்குடன் வடியும் வகையில் உரிய வடிகால் வசதிகளை விவசாயிகள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
அதேபோல, அறுவடை செய்து உலா்த்தி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும். மழை வானிலை மாறிய பிறகு, விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை விற்பனைக்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுச் செல்லவேண்டும்.
மேலும், கனமழையால் கால்நடைகள் பாதிக்கப்படாமலிருக்கத் தேவையானப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் விவசாயிகள் மேற்கொள்ளுமாறு அந்தச் செய்திக் குறிப்பில் அறிவுறுத்தியுள்ளாா்.