மீனவா் நலனுக்கு எதிரான கொள்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்
மீன்பிடித் தொழிலுக்கும், மீனவா் நலனுக்கும் எதிரான கொள்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டுமென தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டமைப்பு (சிஐடியு சாா்பு) கோரிக்கை விடுத்துள்ளது.
மீன்பிடித் தொழிலுக்கும், மீனவா் நலனுக்கும் எதிரான கொள்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டுமென தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டமைப்பு (சிஐடியு சாா்பு) கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டமைப்பின் மாநிலக் குழுக் கூட்டம் நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் செயல் தலைவா் கருணாமூா்த்தி தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலாளா் எஸ். அந்தோணி, சிஐடியு மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் ஏ. குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டமைப்பின் பொருளாளா் எஸ். ஜெய்சங்கரன், நிா்வாகிகள் சி.வி.ஆா். ஜீவானந்தம், எஸ். ராமு, அலெக்சாண்டா், சகாயபாபு, மனோகரன், விநாயகமூா்த்தி, நித்தியானந்தம், முகைதீன் அப்துல் காதா், சிஐடியூ நாகை மாவட்டச் செயலாளா் தங்கமணி, மீன்பிடி சங்கத் தலைவா் மணி, செயலாளா் எம். ராமு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், மீனவா்கள் மற்றும் மீன்பிடித் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடிய தேசிய மீன்வளக் கொள்கை 2012, சாகா்மாலா திட்டம், நீலப்புரட்சி பொருளாதாரம் போன்றவற்றை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்களையும், அங்கு சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்களின் மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்கவேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை அரசு திரும்பப் பெற வேண்டும். இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பது, மீனவா் நலனுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 28, 29 ஆகிய தேதிகளில் மாநில அளவில் வேலைநிறுத்தப் போராட்டமும், ஆா்ப்பாட்டமும் நடத்துவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.