சீர்காழி: கூழையாறு கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கூழையார் கிராமத்தில் வனத்துறையின் ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது.
சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கூழையார் கிராமத்தில் வனத்துறையின் ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது.
பழையாறு முதல் திருமுல்லைவாசல் வரையிலான கடலோர பகுதிகளில் சேகரிக்கப்படும் ஆமை முட்டைகள் இந்த பொறிப்பகத்தில் பாதுகாக்கபட்டு வருகிறது. அரிய வகை ஆமை இனமான ஆலிவ் ரெட்லி பசுபிக் பெருங்கடல் பகுதியில் மட்டுமே வசிக்கும். இவ்வகை ஆமையானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இனப்பெருக்கத்திற்காக தமிழக கடற்கரை பகுதிக்கு வரும்.
ஆமைகள் ஒவ்வொன்றும் சுமார் 150 முதல் 180 முட்டைகள் வரை இடும் தன்மையுடையது. இவ்வாறு கடற்கரை மணல் பரப்பில் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து வனத்துறைக்கு சொந்தமான ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்படுகின்றன.
இந்நிலையில் பொறித்த ஆமைக் குஞ்சுகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், வனச்சரகர் டேனியல் அகியோர் இனைந்து கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இவ்வாண்டு கூழையார் கடல் பகுதியில் ஆமைகள் இட்ட சுமார் 32000 முட்டைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்றாவது கட்டமாக முட்டையிலிருந்து பொறித்து வெளிவந்த 2200 ஆமைக் குஞ்சுகள் இன்று கடலில் விடப்பட்டது.
அரியவகை இனமான ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை மாவட்ட ஆட்சியரும், சட்டமன்ற உறுப்பினரும் இணைந்து கடலில் விட்டனர்.
இதுவரை மூன்று கட்டங்களாக 15,572 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது. இன்று விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள் இந்நாளில் இருந்து மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து இனப்பெருக்கத்திற்காக இதே கடற்பகுதிக்கு வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சீர்காழி வனத்துறையினர், காவல் துறையினர் மற்றும் மீனவர்கள் கலந்துகொண்டனர்.