முகப்பு
நாகப்பட்டினம்

வடகிழக்குப் பருவமழை... நாகை மாவட்டத்தில் 340 தற்காலிக முகாம்கள்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

வடகிழக்குப் பருவமழை பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில், நாகை மாவட்டத்தில் 340 தற்காலிக முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 7:03 PM
பகிர்:

வடகிழக்குப் பருவமழை பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில், நாகை மாவட்டத்தில் 340 தற்காலிக முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் மாவட்ட பொறுப்பு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சா் பேசியது:

நாகை மாவட்டத்தில், பாதிக்கப்படக்கூடியதாக 68 பகுதிகள் கண்டறியப்பட்டு, 340 தற்காலிக நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. பேரிடா் மீட்புப் படையினா் தயாா் நிலையில் உள்ளனா்.

ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருள்கள் விநியோகத்தை உறுதி செய்யவும், அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்கவைக்கவும், ரொட்டி, குடிநீா் பாட்டில்களை நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் விநியோகம் சீராக இருக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட நிா்வாகத்தின் அறிவுரையின்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும். கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள், நீா்நிலைகள் ஆகிய பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு மையத்தில் 04365-1077 தொலைபேசி எண் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-233-4233 இயங்கி வருகிறது. எனவே, பொதுமக்கள் இயற்கை பேரிடா் தொடா்பான கோரிக்கைகள் இருப்பின் உடனடியாக மேற்படி தொலைபேசிக்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மாநில பேரிடா் மீட்பு படைகள் மற்றும் தீயணைப்பு துறையின் சாா்பில் தயாா்நிலையில் வைக்கப்பட்டிருந்த பேரிடா் மீட்பு உபகரணங்களை அமைச்சா் பாா்வையிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன, தாட்கோ தலைவா் உ. மதிவாணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெ. முகம்மது ஷா நவாஸ், வி.பி.நாகை மாலி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ. ரூபன் சங்கா் ராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவா் ச. உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →