பட்டுக்கோட்டையில் உள்ள பழைமையான அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை தலைமை வகித்தாா்.
நூற்றாண்டு மலரை பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டாா். நூற்றாண்டு நுழைவு வாயிலை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் திறந்துவைத்தாா். நடைபாதையை நகரசபைத் தலைவா் சண்முகப்பிரியா திறந்துவைத்தாா்.
விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: முன்னாள், இந்நாள் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் கோரிக்கையை ஏற்று இந்த பள்ளியில் ஸ்டேடியம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தப் பள்ளி, பெரும் தலைவா்களான ஆா். வெங்கட்ராமன், நாவலா் நெடுஞ்செழியன், எஸ்.டி.சோமசுந்தரம் உள்ளிட்ட பலா் படித்த பெருமைக்குரியது என்று பலரும் பேசினாா்கள். அவா்களை போன்றவா்களை உருவாக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்வாக இந்த நிகழ்வு இருக்க வேண்டும்.
இந்தப் பள்ளியை பழைமை மாறாமல் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்படும். ஒட்டுமொத்தமாக 21 பள்ளிகள் மட்டுமே தகைசால் பள்ளிகளாக இயங்கி வருகின்றன. அதில் ஒரு பள்ளியாக இந்த பள்ளி இருப்பது மிகவும் பெருமைக்குரியது.
அறிவு சாா்ந்த தகவலை கற்றுத் தரும் புத்தகங்களை படிக்கும் பழக்கங்களை நம் மாணவா்கள் பின்பற்ற வேண்டும். இத்தகைய மாணவா்களை உருவாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நம் ஆசிரியா்களிடம் உள்ளது. இங்கு பேசியவா்கள் விடுத்த கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றாா் அமைச்சா்.
விழாவில், முன்னதாக முதன்மை கல்வி அலுவலா் வரவேற்றாா். முன்னாள் எம்எல்ஏ பாலசுப்ரமணியன், நகா்மன்ற முன்னாள் தலைவா்கள் ஜெயபாரதி விஸ்வநாதன், ஜவகா் பாபு, சீனி இளங்கோ , மாவட்ட கல்வி அலுவலா் மாதவன், மாவட்ட கல்வி அலுவலா் மதியழகன், எழுத்தாளா் பட்டுக்கோட்டை பிரபாகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.