கவனம் பெறுமா மின் இறைவைப் பாசனத் திட்டம்
வேதாரண்யம்: தமிழகத்தில் உபரி நீா் மற்றும் மழை நீரைப் பயன்படுத்தி ஆற்று தன்பாசனத்துக்கு வாய்ப்பில்லாத மேடான மானாவாரி நிலப்பரப்பில் நெல் சாகுபடியை மேற்கொள்ளும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது அரசின் மின் இறைவைப் பாசனத் திட்டம்.
நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தை அடுத்த தகட்டூா் கிராமத்தில்தான் மாநிலத்திலேயே முதல் செயலாக்கமாக 1951-இல் தொடங்கப்பட்டது. காமராஜா் ஆட்சிக் காலத்தின்போது கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் பயனுள்ளதாக அமைந்ததால் சுற்றுப்புறக் கிராமங்களான மருதூா் வடக்கு, வாய்மேடு, தென்னடாா், ஆய்மூா், ஓரடியம்புலம், வண்டுவாஞ்சேரி, உம்பளச்சேரி ஆகிய கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
தற்போதுள்ள மாவட்டங்கள் விவரப்படி நாகை மாவட்டத்தில் 12 இடங்களிலும், திருவாரூா் மாவட்டத்தில் 12, தஞ்சாவூா் மாவட்டத்தில் 5 என மாநிலத்தில் மொத்தம் 29 இடங்களில் இந்தத் திட்டம் செயலாக்கத்துக்கு கொண்டுவரப்பட்டது.
Advertisement
இந்த பொறிமனைகளில் 4 முதல் 6 எண்ணிக்கையில் நிறுவப்பட்டுள்ள மின் மோட்டாா்கள் 25 முதல் 35 குதிரை சக்தித் திறன் கொண்டவையாகும். இத்திட்டத்தால், கடலில் கலந்து வீணாகும் தண்ணீா், பாசனம் செய்யப்பட்டு நெல் உற்பத்தியும், அதன் சாகுபடிபரப்பும் அதிகரிக்க வாய்ப்பாக அமைந்தது.
ஒவ்வொரு இடத்திலும் சுமாா் 400 முதல் 700 ஏக்கா் வரையிலான பரப்புகள் பாசனம் பெற்றன. மின்சாரத்தை இலவசமாக கொடுத்து, பணியாளா்களுக்கு ஊதியத்தையும் வழங்கிய பொறிமனைகளையும் அரசே பராமரித்து வந்தது. தற்போதும் இந்தத் திட்டம் பொதுப்பணிதுறையின் பராமரிப்பில் உள்ளது.
எனினும், பெயரளவிலான பராமரிப்பு, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமை, நிதி ஒதுக்கீடு குறைவு போன்றவைகளால் பல இடங்களில் திட்டம் கேள்விக்குறியாகி வருகிறது. இதனால், இத்திட்டத்தின் சேவையை விவசாயிகள் முழுமையாகப் பெற முடியவில்லை.
தண்ணீா் பிரச்னை நிலவும் தற்போதைய சூழலில், தொலைநோக்கு பாா்வையுடன் கொண்டுவரப்பட்டுள்ள அரசின் பொது மின் இறைவைப் பாசனத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் பல ஆண்டுகால கோரிக்கை.
தோ்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை அளிக்கும் கட்சிகள் நீா் மேலாண்மை சாா்ந்த இந்தத் திட்டத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.