முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வுகாண மேம்பாலம், இருவழிச்சாலைத் திட்டப் பணிகள் துரிதப்படுத்தப்படுமா?

நீடாமங்கலத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வுகாண, மேம்பாலம் அமைக்கும் பணியையும், தஞ்சாவூர் முதல்

Updated On : 23 பிப்ரவரி, 2018 at 12:53 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:49 PM

நீடாமங்கலத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வுகாண, மேம்பாலம் அமைக்கும் பணியையும், தஞ்சாவூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான இருவழிச்சாலைத் திட்டப் பணியையும்  துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
நீடாமங்கலம் நகரில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி , காரைக்கால் ஆகிய பகுதிகளுக்குத் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இதேபோல், நீடாமங்கலம்  வழியாக நாகை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அத்துடன்,  நிலக்கரி மற்றும் நெல்மூட்டைகள் ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. 
போக்குவரத்து நெருக்கடி: நீடாமங்கலம் வழியாக ரயில்கள் வந்து, செல்லும்போதெல்லாம் ரயில்வே கேட் மூடப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால், சாலை விபத்துக்களும் நிகழ்கின்றன. 
குறிப்பாக, நீடாமங்கலம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நீடாமங்கலம் ரயில்வே கேட், ஒரத்தூர் ரயில்வே கேட், ஆதனூர் ரயில்வே கேட், நீடாமங்கலம் திருவாரூர் சாலையில் வையகளத்தூர் மற்றும் கப்பலுடையான் ரயில்வே கேட்டுகள் என 5 இடங்களில் ரயில்வே கேட்டுகள் ஒரே பாதையில்  உள்ளன. இதனால், ரயில்வே கேட்டுகள் மூடப்படும் போதெல்லாம் திருச்சி- நாகப்பட்டினம் நெடுஞ்சாலைப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டு, பயணிகள் அன்றாடம் அவதிப்படுவது பல வருடங்களாகத் தொடர்ந்து வருகிறது. 
நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் மூடப்படும் நேரம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 7 மணி நேரம் என்றும் அந்த நேரங்களில் எல்லாம் நெடுஞ்சாலைப் போக்குவரத்தில் பாதிப்பும், நெருக்கடியும் ஏற்படுகிறது என்றும் அதற்காக மாற்று வழியாக புறவழிச்சாலைத் திட்டம் கொண்டுவர வேண்டும் எனவும் கடந்த 30 வருடங்களுக்கு முன்பிருந்தே கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
புறவழிச்சாலைத் திட்டம்: கடந்த கால மத்திய ஆட்சியில் நீடாமங்கலம் புறவழிச்சாலைத் திட்டத்துக்கு முதலில் ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர், திருச்சி முதல் நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழிச்சாலைத் திட்டத்தினால் புறவழிச்சாலைத் திட்டம் கைவிடப்பட்டது. நான்கு வழிச்சாலைத் திட்டமும் திருச்சி முதல் தஞ்சாவூர் வரை நிறைவேற்றப்பட்டது. பின்னர் நிதிப் பற்றாக்குறை காரணமாக 4 வழிச்சாலைத் திட்டம் இரண்டு வழிச்சாலைத் திட்டமாக அறிவிக்கப்பட்டு, அந்த பணியும் பல்வேறு காரணங்களால் தாமதப்பட்டுள்ளது.
மேம்பாலம்: நீடாமங்கலம் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வுகாணவும், உள்ளூர் மக்கள் நிம்மதியாக கடை வீதிக்கு சென்று வர வசதியாகவும்  மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நீடாமங்கலம் மேம்பாலம் திட்டத்துக்காக ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதைத்தொடர்ந்து, தமிழக நெடுஞ்சாலைத் துறையினர், மேம்பாலம் அமைவதற்கான வரைபடத்தையும் தயாரித்தனர். ரயில்வே உயரதிகாரிகளும், தமிழக நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களும் வரைபடத்தைக் கொண்டு மேம்பாலம் அமையும் வாய்ப்புள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, மேம்பாலம் அமைய சில வருடங்கள் ஆகும்.  எனவே, உடனடியாக  கீழ்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே உயரதிகாரி உத்தரவாதம் அளித்தார். இதற்காக,  மத்திய அரசும் ரூ. 44 கோடியே 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
பின்னர், பாலம் அமைக்க மண் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் பின் எந்த பணியுமே நடைபெறவில்லை. இதற்குக் காரணம், மேம்பாலம் அமையும் பகுதியில் (ஒரத்தூர் கிராமம்) நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் உள்ளதால் அதற்கான நிலங்கள் பாதிக்கப்படும் என கோவை வேளாண் பல்கலைக்கழகம் மூலம் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டதால் மேம்பாலப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை: நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியை போக்கிட மேம்பாலம் அமைத்திடும் பணியைத் துரிதப்படுத்திட வேண்டும். இருவழிச்சாலைத் திட்டத்தைத் துரிதப்படுத்த வேண்டும். இந்த இரண்டு பணிகளுக்குமிடையே கீழ்ப்பாலம் அமைக்கும் பணியைத் தொடங்க வேண்டும் என்பது தான் பொதுமக்களின் கோரிக்கையாகும். 
மத்திய, மாநில அரசுகள் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.