மரக்கன்றுகள் நடுவதன் மூலம் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும் என, முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான ஆர். கலைமதி தெரிவித்தார்.
திருவாரூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் விளமல் லயன்ஸ் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான ஆர்.கலைமதி பங்கேற்றுப் பேசியது:
புவி வெப்பமடைவது ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. புவி வெப்ப மயமாதலைக் குறைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புவி வெப்பத்தைக் குறைப்பதில் மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, மரங்கள் வளர்ப்பதை அனைவரும் கடமையாக கொள்ள வேண்டும். மரங்கள் வளர்ப்பதால் மழை பொழியும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். புவியின் வெப்பம் குறையும். எனவே, மரக்கன்றுகள் நடுவதை அனைவரும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர், நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ். பக்கிரிசாமி, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி எம். ராஜேந்திரன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் கோவிந்தராஜ், விளமல் லயன்ஸ் சங்கத் தலைவர் டி.பி.எஸ். மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.