முகப்பு
திருவாரூர்

கொட்டில் முறையில் ஆடு வளர்ப்பு பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அண்மையில் கொட்டில் முறையில் ஆடு வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. 

Updated On : 25 பிப்ரவரி 2019, 6:37 am IST
பகிர்:

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அண்மையில் கொட்டில் முறையில் ஆடு வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. 
பயிற்சிக்கு வேளாண்மை அறிவியல் நிலைய விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் மு. ராமசுப்பிரமணியன் தலைமை வகித்து பேசியது: 
தமிழகத்தில் மாறி வரும் உணவுப் பழக்கத்தால் ஆண்டுக்கு ஆண்டு இறைச்சிக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால், ஆடு வளர்ப்பு தொழில் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தலைச்சேரி என்ற இனம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகை ஆடுகள் கொட்டில் முறை வளர்ப்புக்கு ஏற்ற ரகமாக கருதப்படுகிறது. குறிப்பாக விவசாயம் பொய்க்கும் காலங்களில் ஆடுகள் விவசாயிகளுக்கான பொருளாதார தேவையை ஈடுகட்டும் செல்வங்களாக கருதப்படுகின்றன. எனவே, விவசாயிகள் ஆடு வளர்ப்பின் மூலம் பொருளாதார முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
உழவியல் துறை பயிற்சி உதவியாளர் ஆ. ராஜேஷ்குமார் பேசியது: கொட்டில் முறை வளர்ப்புக்கு ஏற்ற ரகமாக தலைச்சேரி மற்றும் போயர் இன ஆடு கருதப்பட்டது. இந்த வகை ஆடுகளின் இறைச்சி சுவையாகவும், அதன் பால் சுரக்கும் திறன் அதிகமாகவும் இருக்கிறது. போயர் ஆடுகளின் வளர்ச்சி வேகம் மிகவும் பிரமிக்கதக்கது. பிறந்த ஒரு குட்டி 90  நாள்களில் 30  கிலோவாக இருக்கும். அதிகபட்சமாக ஆண் ஆடுகள் சுமாராக 120  முதல் 140  கிலோ வரை வளரும் தன்மை கொண்டவை போயர் ஆட்டு இனத்துடன் தலைச்சேரி ஆடுகளை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட குட்டிகள் 6 மாதத்தில் 25 கிலோ எடை கொண்டதாக வளருகிறது. 
முதலீடு: தலைச்சேரி மற்றும் போயர் இன கலப்பின குட்டிகளை உருவாக்கி வளர்க்க சிறிய அளவு முதலீடு போதுமானது. நிரந்தர முதலீடாக 60-க்கு 20 என்ற அளவில் தென்னை மரச்சட்டங்களால் ஆன சல்லடைதரை அமைப்பை கொண்ட கொட்டகையை அமைக்க வேண்டும். இந்த வகையான கொட்டகை தரையிலிருந்து 4 அடி உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். ஓர் ஆட்டுக்கு சராசரியாக 20 சதுரஅடி இடம் இருக்க வேண்டும். ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களைகொண்டு 20 -30 ஆடுகள் வரை
வளர்க்கலாம்.
வருமானம்: நல்லமுறையில பண்ணையைப் பராமரித்தால் ஒரு ஈத்துக்கு இரண்டில் இருந்து மூன்று குட்டிகள் வரை கிடைக்கும். 25 தாய் ஆடுகள் மூலமாக இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை சராசரியாக 150 குட்டிகள் கிடைக்கும். ஆண்டுக்கு சராசரியாக 75 குட்டிகளை ஆறு மாதம் வரைக்கும் வளர்த்து, உயிர் எடைக்கு கிலோ ரூ. 250 க்கு விற்றால் ஆறு மாதத்தில் ஒரு ஆடு 25 கிலோவரை எடை வந்துவிடும். சராசரியாக ஒரு ஆட்டுக்கு 5 ஆயிரம் வைத்துக்கொண்டால் ஆண்டுக்கு ரூ. 4.68 லட்சம் வருமானம் கிடைக்கும் என்றார். இப்பயிற்சியில் 50 விவசாயிகள் கலந்துகொண்டுபயனடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.