மன்னார்குடியில், செவ்வாய்க்கிழமை பெய்த கன மழையால் நகரின் பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மன்னார்குடியில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக பகல் மற்றும் இரவு நேரங்களில் லேசன மழை பெய்து வந்தது. ஒருசில நாள்கள் இரவில் மட்டும் பலத்த காற்றுடன் கனமழையாக பெய்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் 2 முதல் 2.45 வரை கன மழை பெய்தது. இதனால், மக்கள் நடமாட்டம் இல்லாமல் வாகனங்களும் செல்லாததாலும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நகரின் மையப் பகுதியான பந்தலடியில் தெப்பம் பேல் மழைநீர் தேங்கி நின்றது. காந்தி சாலை, பேருந்து நிலைய சாலை, சந்தைப்பேட்டை சாலை ஆகிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து மழை பெய்து வருவாதல், மன்னார்குடி பாமணி ஆற்றில் முழு அளவு தண்ணீர் செல்வதாலும் பூமி குளிர்ந்து இருப்பதுடன், நகரில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருவதையடுத்து நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
கூத்தாநல்லூரில்...
கூத்தாநல்லூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை 3 மணி வரை இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் பெருக்கெடுத்த மழை நீர் ஆறு, குளங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் சென்று தேங்கியது.