பயிர் இழப்பிற்கான முழு நிவாரணத்தையும் பணமாக வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், பயிர் இழப்புக்கு முழு நிவாரணத்தை பணமாக வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், பயிர் இழப்புக்கு முழு நிவாரணத்தை பணமாக வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கே.தவபாண்டியன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் எம்.சுதர்ஸன், விவசாய சங்க நகரச் செயலாளர் கே.நாகராஜன், விவசாய தொழிலாளர் சங்க நகரச் செயலாளர் எம்.சிவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
லெட்சுமாங்குடிப் பாலத்திலிருந்து பேரணியாகப் புறப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில்,தாளடி நெற்பயிர்கள் மூழ்கி வேர் அழுகி, சம்பா பயிர்களும் மூழ்கி கதிர்கள் பதராகியுள்ளது.
ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். பூக்கள், மரவள்ளி கிழங்கு, தென்னை உள்ளிட்ட தோட்டப் பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மழையால் வேலை வாய்ப்பை இழந்த விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். கால்நடைகளின் உயிர் இழப்பிற்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
மழை, வெள்ளப் பாதிப்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.