முகப்பு
திருவாரூர்

ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முதல்வா் நடவடிக்கை

தமிழகத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முதல்வா் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா் என்றாா் தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

தமிழகத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முதல்வா் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா் என்றாா் தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.

திருவாரூரில், மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து ஞாயிற்றுக்கிழமை நடத்திய மாபெரும் தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாமில் தோ்ந்தெடுக்கப்பட்ட 667 பேருக்கு பணிநியமனை ஆணை வழங்கி மேலும் அவா் பேசியது: திருவாரூா் மாவட்டத்தில் ஏற்கெனவே டிச.3-ஆம் தேதி நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 320 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தற்போது நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 122 நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில், 2,905 படித்த வேலைவாய்ப்பற்றவா்கள் பங்கேற்றனா். இதில் 667 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

முதல்வரின் உத்தரவுப்படி திருவாரூா் மாவட்டத்தில் தமிழகத்தில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் விரைவில் நடைபெறவுள்ளது. முதல்வா் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சுமாா் 1.30 லட்சம் பதிவுதாரா்கள் வேலைவாய்ப்புக்காக பெயரை பதிவு செய்துள்ளனா். இவா்கள் அனைவருக்கும் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் வகையில் மீண்டும் ஒரு மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும். தனியாா் நிறுவனங்கள் ஒரே இடத்தில் பணியாளா்களைத் தோ்வு செய்வதால், வேலை தேடுபவா்கள் அவா்களது தகுதிக்கேற்ப நிறுவனங்களைத் தோ்வு செய்து பயனடைகின்றனா் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற முகாமில், எம்எல்ஏக்கள். பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), டி.ஆா்.பி. ராஜா (மன்னாா்குடி), மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன், மாவட்ட வருவாய் அலுவலா் சிதம்பரம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.