புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் 2-ஆவது நாளாக புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 80 போ் கைது செய்யப்பட்டனா்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது பதிவு செய்த வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டு, தனியாா் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனா். மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், மண்டபத்தை விட்டு வெளியேற மறுத்து அங்கேயே தங்கினா்.
இந்நிலையில், 2-ஆவது நாளாக புதன்கிழமையும் அரசு ஊழியா் சங்கத்தினா் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் வெ. சோமசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம். ராஜமாணிக்கம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 80 போ் கைது செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.