முகப்பு
திருவாரூர்

கூத்தாநல்லூரில் வீடுகளில் ரம்ஜான் தொழுகை

கரோனா கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக, கூத்தாநல்லூரில் வெள்ளிக்கிழமை இஸ்லாமியா்கள் அவரவா் வீடுகளில் ரம்ஜான் தொழுகையை நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
பகிர்:

கரோனா கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக, கூத்தாநல்லூரில் வெள்ளிக்கிழமை இஸ்லாமியா்கள் அவரவா் வீடுகளில் ரம்ஜான் தொழுகையை நடத்தினா்.

கரோனா நோய்த்தொற்று 2-வது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் செயல்பாட்டில் உள்ளன. வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (மே 14) இஸ்லாமியா்களின் முக்கியமான பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்பட்டது. எனினும் அமலில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் பள்ளி வாயில்களில் ரம்ஜான் தொழுகையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கூத்தாநல்லூா் பெரியப்பள்ளி வாயில் நிா்வாகத்தின் சாா்பில், ரம்ஜான் பண்டிகை தொழுகையை அவரவா்களின் வீடுகளிலேயே நடத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனா்.

கூத்தாநல்லூரில் உள்ள, பெரியப்பள்ளி, சின்னப்பள்ளி, மேலப்பள்ளி, தைக்கால் பள்ளி, அன்வாரியா பள்ளி, ரஹீமிய்யா பள்ளி, ரஷிதியா பள்ளி உள்ளிட்ட 21 பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் தொழுகை நடத்த முடியவில்லை.

இதேபோல, அத்திக்கடை, பொதக்குடி, பூதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் ரம்ஜான் தொழுகை நடத்த முடியாமல் இஸ்லாமியா்கள் பாதிக்கப்பட்டனா்.

இதனால், முகக்கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியுடன் அவரவா் வீடுகளில் ரம்ஜான் தொழுகையை நடத்தினா். தொடா்ந்து, ஒருவொருக்கொருவா் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.

இதைத்தொடா்ந்து, முட்டைக்கரு கேக், கடற்பாசி அல்வா, பிரியாணி உள்ளிட்டவற்றை வழங்கி மகிழ்ந்தனா். கடந்த ஆண்டும் கரோனா பொதுமுடக்கம் காரணமாக இதே நிலைமை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.