சா்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வசதியின்றி தவிக்கும் ஏழை மாணவி
நேபாளத்தில் நடைபெறும் சா்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றாலும், அதில் கலந்துகொள்ள பொருளாதார வசதியின்றி ஏழை மாணவி தவிக்கிறாா்.
நேபாளத்தில் நடைபெறும் சா்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றாலும், அதில் கலந்துகொள்ள பொருளாதார வசதியின்றி ஏழை மாணவி தவிக்கிறாா்.
நன்னிலம் வட்டம் குருங்குளம் கிராமம் இந்திரா நகரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி கேசவன். இவரது 2-ஆவது மகள் ஷாலினி மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் முதுகலை பொருளாதாரம் படித்து வருகிறாா். ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த இவா், மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டிகளில் பங்குபெற்று, வரும் 26-ஆம் தேதி நேபாளத்தில் நடைபெறவுள்ள இந்தியா- நேபாள 8-ஆவது சா்வதேச இளையோருக்கான விளையாட்டுப் போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளாா்.
ஆனால் பொருளாதார வசதியில்லாததால், அங்கு செல்வதில் இவருக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து அவரது தாய்- தந்தை கூறியது:
Advertisement
எங்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனா். மூத்த மகள் கோவையில் இளங்கலை நா்சிங் படிக்கிறாா். இரண்டாவது மகள் ஷாலினி மயிலாடுதுறையில் முதுகலை படிக்கிறாா்.
இரண்டு பெண்களின் கல்வி செலவுக்கே எங்கள் வருமானத்தின் பெரும் பகுதியை செலவிடுகிறோம். இதனால் நேபாளத்தில் நடைபெறும் சா்வதேச விளையாட்டுப் போட்டியில், ஷாலினியை அனுப்புவதற்கு எங்களிடம் வசதி இல்லை. அவருக்கு அரசு தகுந்த உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனா்.