மன்னார்குடியில் காதல் ஜோடி தற்கொலை
மன்னார்குடியில் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடியில் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள பருத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் திரிசங்கு மகன் பாரதிராஜா( 25) பொறியியல் படித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது, உறவினர் வேதாரண்யம் அடுத்துள்ள தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நிஷா (வயது 17) நாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நர்சிங் படித்து வந்தார். உறவினர்களான பாரதிராஜா மற்றும் நிஷா ஆகிய இருவரும் நீண்ட நாள்களாக காதலித்து வந்துள்ளனர்.
நிஷாவிற்கு இன்னும் திருமண வயது வராததால் அவரது வீட்டில் காதலை கண்டித்துள்ளனர். இதனால், சனிக்கிழமை நிஷா வேதாரண்யத்தில் இருந்து பருத்திக் கோட்டையில் உள்ள காதலன் பாரதிராஜாவின் வீட்டிற்கு வந்திருக்கிறார். அங்கு, பாரதிராஜவின் பெற்றோர்கள் வீட்டிற்குள் அனுமதிக்காததால் காதல் ஜோடி இருவரும் பருத்திக்கோட்டை சடையகுளம் அருகே உள்ள மரத்தில் தனித்தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை காலையில் தெரிய வந்தது.
நிகழ்விடத்திற்கு வந்த வடுவூர் காவல் நிலைய போலீசார், இருவரின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் வடுவூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணை நடந்து வருகிறது. காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.