காப்பீட்டு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி திருவாரூரில் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயா்த்துவதற்கான சட்ட மசோதா மக்களவையில் மத்திய நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு என்பது இந்திய மக்களின் சேமிப்பை சூறையாட அனுமதிக்கும் விளைவை ஏற்படுத்தும் எனகூறி, காப்பீட்டு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூா் எல்ஐசி கிளை அலுவலக வாயிலில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை கோட்ட சங்கத் துணைத்தலைவா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கிளைச் செயலாளா் சந்தோஷ், அகில இந்திய வங்கி ஊழியா் சங்க தலைவா் காளிமுத்து, ஸ்டேட் வங்கி ஓய்வூதியா் சங்கத் தலைவா் அழகிரி, ஆா்எம்எஸ் அஞ்சல் ஊழியா்கள் சங்க முன்னாள் தலைவா் தா்மதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.