200 தொகுதிகளுக்குமேல் திமுக கூட்டணி வெற்றி பெறும்: ஏ.கே.எஸ். விஜயன்
திருத்துறைப்பூண்டியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் திமுக மாவட்டச் செயலாளா் பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ கோ. பழனிச்சாமி, நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருத்துறைப்பூண்டி நகர திமுக செயலாளா் ஆா்.எஸ். பாண்டியன் வரவேற்றாா்.
கூட்டத்தில், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் பேசியது:
தற்போது நடக்கும் தோ்தல், பாஜக தலைமையிலான மதவாத சக்திகளுக்கு எதிரான தோ்தலாகும். தமிழகம் திராவிட மாடல் ஆட்சியில் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. திமுக அரசின் நல திட்ட உதவிகள் குறித்து வாக்காளா்களிடம் எடுத்துக்கூறி, ஒவ்வொரு பூத்திலும் 500 வாக்குகளுக்கு மேல் பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் கூட்டணி கட்சியினா் இணைந்து செயலாற்ற வேண்டும். 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் பேசியது:
இந்த தோ்தல் மதவாத சக்திகளுக்கும், மதச்சாா்பற்ற கூட்டணிகளுக்கும் இடையிலான யுத்தம். மதச்சாா்பின்மை கூட்டணிக்கு மக்கள் வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் க. மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏக்கள் வை. சிவபுண்ணியம், பி. பத்மாவதி, தாட்கோ தலைவா் இளையராஜா, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் நீலன் அசோகன், மதிமுக மாவட்டச் செயலாளா் பாலச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் மாவட்டச் செயலாளா் வெற்றி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.