தில்லியில் பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாதுகாக்க 3 மாநகராட்சிகளும் உறுதி
தில்லியில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்படும் என்று மூன்று மாநகராட்சி மேயர்களும் தெரிவித்தனர்.
தில்லியில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்படும் என்று மூன்று மாநகராட்சி மேயர்களும் தெரிவித்தனர்.
உலகப் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் தினம் உலக அளவில் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் நினைவுச்சின்னங்களை பாதுகாக்கப் பாடுபடுவதாக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இது தொடர்பாக வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் ப்ரீத்தி அகர்வால் கூறுகையில், "செங்கோட்டை, ஜாமா மசூதி, சாந்தினி சௌக் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த பாரம்பரிய நினைவிடங்களை தூய்மையாகப் பாதுகாத்து வருகிறோம். செங்கோட்டையை ஒட்டியுள்ள சாலைகள் அண்மையில் மாநகராட்சியால் நவீனப்படுத்தப்பட்டன. வரலாற்றுச் சிறப்பு மிக்க பழைய தில்லியின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பல வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலேயே அமைந்துள்ளன. அவற்றைப் பாதுகாக்க உறுதி எடுத்துள்ளோம்' என்றார்.
தெற்கு தில்லி மாநகராட்சி மேயர் கமல்ஜீத் ஷெராவத் கூறுகையில், "பல்வேறு இன மக்கள் தங்களின் கலாசாரத்தை பகிர்ந்து கொள்ளவும், நினைவுகூரவும் இத்தினம் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. வரலாற்றுச் சான்றுகளாக உள்ள நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கவும் அவற்றை சரியாகப் பேணவும் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்' என்றார். கிழக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "பாரம்பரிய நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பது தொடர்பான பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது. பாரம்பரிய நினைவுச் சின்னங்களைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை மாநகராட்சி ஊழியர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம்" என்றனர்.