முகப்பு
புதுதில்லி

குட்கா மேல்முறையீட்டு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட

Updated On : 14 மே, 2018 at 11:50 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடமால் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கக் கோரியும், குட்கா உள்ளிட்ட பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் துறை டிஜிபி ராஜேந்திரன், காவல் துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் அனுமதி அளித்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து வந்த சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனிடையே, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே 1-ஆம் தேதி கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேல்முறையீடு: இந்நிலையில், குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களின் ஒருவரான திருவள்ளூர் ராஜாஜிபுரத்தைச் சேர்ந்த இ. சிவக்குமார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மே 2-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை: இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் இ. சிவக்குமார் சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, குட்கா வழக்கு விசாரணையில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் (டிவிஏசி) கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ள போது, சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது தவறாகும். டிவிஏசி விசாரணைக்கு மனுதாரர் முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறார். ஆனால், இந்த விவகாரத்தில் விசாரணையின் நிலை அறிக்கையையும், வழக்கின் நிலையையும் சென்னை உயர் நீதிமன்றம் ஆராயவில்லை. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்துள்ளது. ஆனால், அரசியல் லாபத்துக்காக, எதிர்க்கட்சி சார்பில் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட மற்றொரு அமர்வு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கக் கூடாது. எனவே, குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்' என்றார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி. வில்சன் வாதிடுகையில், தமிழக அரசு பான் மசாலா, குட்கா தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு தடை விதித்தது. ஆண்டுக்கு ரூ. 33 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகத்தை இந்த பான் மசாலா, குட்கா கொண்டுள்ளது. பான் மசாலா, குட்கா ஆகியவை கடைகளில் எளிதாகக் கிடைப்பதால் 15 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் அவற்றுக்கு அடிமையாகும் நிலை உள்ளது. இந்நிலையில், குட்கா நிறுவனத்தின் உரிமையாளர் ரூ. 250 கோடி அளவுக்கு வரி எய்ப்பு செய்ததாக கடந்த 2016-இல் புகார் கிடைத்தது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையில் கிடைத்த நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ள நபர்களுக்கு குட்கா நிறுவனங்கள் தொடர்ந்து பணம் கொடுத்ததாக நம்பப்படுகிறது. குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு சரியே' என்றார்.
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,  இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது' எனத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.