துவாரகா விரைவுச் சாலைப் பணியை மீண்டும் தொடங்க வலியுறுத்தல்
தற்போது நிறுத்தப்பட்டுள்ள துவாரகா அதிவிரைவுச் சாலைப் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று குடியிருப்போர் நலச் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தற்போது நிறுத்தப்பட்டுள்ள துவாரகா அதிவிரைவுச் சாலைப் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று குடியிருப்போர் நலச் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பாக துவாரகா விரைவுச் சாலை நலச் சங்கத்தின் தலைவர் யாஷேஷ் யாதவ் கூறியதாவது: துவாரகா விரைவுச் சாலையை ஒட்டிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 175 குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஒன்றிணைந்து துவாரகா விரைவுச் சாலை நலச் சங்கத்தை ஆரம்பித்துள்ளோம். சில நாள்களாக துவாரகா அதிவிரைவுச் சாலைப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளாகத் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இதனால், தில்லி, குருகிராம் பகுதிகளில் வசிக்கும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தில்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நிலவும் அதிகார மோதல்தான் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இந்தப் பணிகள் கடந்த மாதம் தொடங்கவிருந்தது. ஆனால், தில்லி வனத் துறையின் ஒப்புதல் கிடைக்காததால், குறிப்பிட்டபடி பணிகள் தொடங்கப்படவில்லை.
இது தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரைச் சந்தித்துப் பேசினோம். ஆனால், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இச்சாலைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இச்சாலைத் திட்டப் பணியை உடனே தொடங்க வேண்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.