தில்லி பல்கலைக்கு மத்திய அரசு துரோகம்: என்எஸ்யுஐ
"தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத் தரத் தகுதி வழங்கிய மத்திய அரசு, இந்தியாவின் அடையாளமாக உள்ள தில்லி பல்கலைக்கழகத்துக்கு
"தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத் தரத் தகுதி வழங்கிய மத்திய அரசு, இந்தியாவின் அடையாளமாக உள்ள தில்லி பல்கலைக்கழகத்துக்கு அந்தத் தகுதியை வழங்காமல் துரோகம் செய்து விட்டது' என்று இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக என்எஸ்யுஐ செயலரும், தில்லி பிரிவு பொறுப்பாளருமான அனுஷேஷ் சர்மா தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
பிரதமர் மோடி தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாகக் கூறுகிறார். ஆனால், தில்லி பல்கலைக்கழகத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் அவரின் அரசு தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. இன்னும் அடிக்கல் கூட நாட்டப்படாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத் தரத் தகுதியை வழங்கியுள்ளது மத்திய அரசு. இதனால், இன்னும் தொடங்கப்படாத அப்பல்கலைக்கழகத்துக்கு ரூ.1000 கோடி அரசு மானியமாகக் கிடைக்கவுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நேரத்தில் ஜியோ இன்ஸ்டிட்யூட்டுக்கு சொந்தமாக கட்டடம் இல்லை, ஆசிரியர்கள், மாணவர்கள் இல்லை. சொந்தமாக இணையதளம்கூட இல்லை. அந்த நிறுவனம் வருவதற்கு, இன்னும் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும், அதற்கு உலகத்தரத் தகுதி வழங்கப்பட்டு, ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவின் அடையாளமாக விளங்கும் தில்லி பல்கலைக்கழகத்துக்கு உலகத் தரத் தகுதியை வழங்காமல் தில்லி அரசு துரோகம் செய்துள்ளது. தில்லி பல்கலைக்கழகத்துக்கு அந்தத் தகுதியை வழங்கியிருந்தால், மத்திய அரசு சார்பில் தில்லி பல்கலைக்கழகத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கும். இந்த நிதி மூலம் தில்லி பல்கலைக்கழகத்தின் உள்கட்டுமானம், கல்வி வசதிகள் அதிகரிக்கப்பட்டிருக்கும். தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக கூறிவரும் பிரதமர் மோடி தில்லி பல்கலைக்கழகத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்றார் அவர்.