முகப்பு
புதுதில்லி

குடியரசுத் தின பாதுகாப்பு: சில மெட்ரோ ரயில் நிலையங்கள், வாகன நிறுத்துமிடங்கள் மூடல்

குடியரசு தின விழாவையொட்டி வரும் ஜனவரி 26-ஆம் தேதி மெட்ரோ ரயில் சேவையில் சில இடங்களில்

Updated On : 23 ஜனவரி 2019, 11:20 pm IST
பகிர்:

குடியரசு தின விழாவையொட்டி வரும் ஜனவரி 26-ஆம் தேதி மெட்ரோ ரயில் சேவையில் சில இடங்களில் ரயில் நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ( டிஎம்ஆர்சி) அறிவித்துள்ளது.
நாட்டின் 70-ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் வரும் 26-ஆம் தேதி தில்லியில் நடைபெற உள்ளது. குறிப்பாக குடியரசு தின விழா அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி தில்லியில் மையப் பகுதியான ராஜபாதையில் இருந்து தொடங்கி செங்கோட்டை வரை செல்கிறது. 
இந்நிகழ்வுகள் நண்பகல் வரை நீடிக்கும் என்பதால், அந்தப் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களை குறிப்பிட்ட நேரம் வரை மூடுவதற்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயரதிகாரி புதன்கிழமை தெரிவித்ததாவது:
குடியரசு தின விழாவையொட்டி வரும் சனிக்கிழமை பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, தில்லி போலீஸாரின் அறிவுறுத்தலின்படி குறிப்பிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் சேவை குறைக்கப்பட உள்ளது. மெட்ரோ வழித்தடம் இரண்டில் அதாவது, ஹுடா சிட்டி சென்டர் மற்றும் சமய்ப்பூர் பாத்லி இடையே மெட்ரோ வழித்தடம் 6-இல் கஷ்மீரி கேட் மற்றும் ராஜா நாகர் சிங் ஆகியவற்றின் இடையே வரும் சனிக்கிழமை மெட்ரோ ரயில் சேவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மெட்ரோ வழித்தடம் 2-இல் உள்ள சென்ட்ரல் செக்ரடேரியேட் மற்றும் உத்யோக் பவன் மெட்ரோ ரயில் நிலையங்களின் உள்நுழை வாயில் மற்றும் வெளியேறும் வாயில் பகுதிகள் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூடப்பட்டிருக்கும். அதேபோல, பட்டேல் சௌக் மற்றும் லோக் கல்யாண் மார்க் மெட்ரோ ரயில் நிலையங்களின்நுழைவு மற்றும் வெளியேறும் வாயில் பகுதிகள் காலை 8.45 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூடப்பட்டிருக்கும்.
சென்ட்ரல் செக்ரடேரியேட் மெட்ரோ ரயில் நிலையம் வழித்தடம் 2 மற்றும் வழித்தடம் 6-இல் வரும் பயணிகள் மாறிச் செல்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும். மெட்ரோ வழித்தடம் 6-இல் உள்ள ஐடிஓ, தில்லி கேட், லால் கிலா, ஜாமா மசூதி ஆகிய ரயில் நிலையங்கள் நாள் முழுவதும் திறந்திருக்கும். எனினும், இந்த ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் டிக்கெட் கவுன்ட்டர் சேவை தொடங்கும் நேரத்தில் இருந்து நண்பகல் 12 மணி வரை மூடப்பட்டிருக்கும். 
அதன்படி, ஐடிஓ ரயில் நிலையத்தின் 3, 4, 6-ஆம் எண் நுழைவு வாயில்கள், தில்லி கேட் ரயில் நிலையத்தின் 1, 4, 5-ஆம் எண் நுழைவு வாயில்கள், செங்கோட்டை ரயில் நிலையத்தின் 4-ஆம் எண் நுழைவு வாயில், ஜாமா மசூதி ரயில் நிலையத்தில் 3, 4-ஆம் எண் நுழைவு வாயில்கள் மூடப்பட்டிருக்கும்.
வாகன நிறுத்துமிடங்கள்: இது தவிர, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் ஜனவரி 25-ஆம் தேதி காலை 6 மணியில் இருந்து ஜனவரி 26-ஆம் தேதி பிற்பகல் 2 மணிவரை மூடப்பட்டிருக்கும். இந்த நடவடிக்கையானது பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.