வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வெற்றிபெற வைக்கும் நோக்கில், காங்கிரஸ் கட்சிக்குள் ஓர் அணி செயல்பட்டு வருவதாக ஆம் ஆத்மியின் தில்லிப் பொறுப்பாளர் கோபால் ராய் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய சில செயல்பாடுகள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளன. தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்காததன் மூலம் பாஜகவுக்கு மறைமுகமாக காங்கிரஸ் உதவியுள்ளது.
பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை விடத் தற்போதைய பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகிறார் என்று தில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் வெளிப்படையாகப் பாராட்டியுள்ளார்.
தமது கட்சி சார்பில் பிரதமராக இருந்தவரைவிட இன்னொரு கட்சி சார்பில் பிரதமராக இருப்பவர் சிறப்பாக செயல்படுவதாக ஷீலா தீட்சித் சான்றிதழ் அளித்துள்ளதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? மக்களவைத் தேர்தலில் பாஜகவை வெற்றிபெற வைக்கும் முனைப்புடன் காங்கிரஸ் கட்சிக்குள் ஓர் அணி இயங்கி வருகிறது.
2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல தில்லிக்கு தனிமாநில அந்தஸ்து வழங்காத பாஜகவைக் கண்டித்து தில்லியின் 7 மக்களவைத் தொகுதிகளிலும், பாஜகவின் தேர்தல் அறிக்கையை எரித்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
இதேபோல், வரும் ஞாயிற்றுக்கிழமை தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜகவின் தேர்தல் அறிக்கையை எரித்துப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
அப்போது, மத்திய அரசு எவ்வாறு தில்லி மக்களை ஏமாற்றி வருகிறது என்பதை மக்களுக்குப் புரிய வைப்போம் என்றார் அவர்.