போலி விமான பயண டிக்கெட்டுடன் தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் நுழைந்த இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். தன்னுடைய நண்பரை வழியனுப்புவதற்காக போலி டிக்கெட்டுடன் விமான நிலையத்தில் அவர் நுழைந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் கூறினர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு சம்பவத்தன்று இளைஞர் ஒருவர் வந்தார். தாம் வைத்திருந்த விமானப் பயண டிக்கெட் மூலம் உள்ளே சென்றார். அவரிடம் தில்லியில் இருந்து ஹீத்ரூ செல்வதற்கான விமான டிக்கெட் இருந்தது.
அவர் வைத்திருந்த டிக்கெட்டில் சந்தேகமடைந்த பாதுகாப்பு வீரர், அதன் நம்பகத் தன்மை குறித்து அந்த இளைஞரிடம் விசாரித்தார். ஆனால், அது அசல் டிக்கெட் என அந்த இளைஞர் கூறினார்.
அதன்பிறகு, தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அது போலி டிக்கெட் எனத் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அவர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இன்பால் ஸடோக் (35) என்பது தெரிய வந்தது.
தனது நண்பரைச் சந்திக்க தில்லி வந்ததாகவும், வேறு ஒரு நாட்டுக்குச் செல்லும் நண்பரை வழியனுப்புவதற்காக தில்லி விமான நிலையத்திற்குள் போலி டிக்கெட்டுடன் நுழைந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அவரை கைது செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.