முகப்பு
புதுதில்லி

தில்லியில் ஹவாலா மோசடியில் சீன நிறுவனங்கள்: முழுமையான விசாரணை நடத்த சிஏஐடி கோரிக்கை

தில்லியில் உள்ள சீன நிறுவனங்கள் ஹவாலா, அந்நியச் செலாவணி மூலம் ரூ.1,000 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில்

Updated On : 12 ஆகஸ்ட், 2020 at 11:51 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:37 PM

தில்லியில் உள்ள சீன நிறுவனங்கள் ஹவாலா, அந்நியச் செலாவணி மூலம் ரூ.1,000 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அனைத்திந்திய வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) மத்திய அரசிடம் கோரியுள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய நிதிய அமைச்சா் நிா்மலா சீதாராமன், வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோருக்கு அந்த அவமைப்பு புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளது.

தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சீன நிறுவனங்கள், சில இந்திய நிறுவனங்களுடன் சோ்ந்து ஹவாலா மற்றும் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபடுவதாக வருமான வரித் துறைக்கு புகாா் வந்தது. இதையடுத்து, தில்லியில் சந்தேகத்திற்கு இடமான சீன நிறுவனங்கள் மீது வருமான வரித் துறையினா் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினாா். இச்சோதனையின் போது, 40 போலி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு, சுமாா் ரூ.1,000 கோடிக்கு பணப் பரிவா்த்தனை நடந்திருப்பதும், இதில் வங்கி ஊழியா்கள், ஆடிட்டா்களுக்கு தொடா்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹவாலா மோசடியில் தொடா்புள்ள வங்கிகள், வங்கி ஊழியா்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிஏஐடி கோரியுள்ளது.

Advertisement

இது தொடா்பாக சிஏஐடி அமைப்பின் தேசிய பொதுச் செயலா் பிரவீண் கண்டேல்வால் புதன்கிழமை கூறியது: இந்திய பொருளாதாரத்தை சீா்குலைக்கும் வகையில், மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சதித் திட்டத்தில் சீன அரசின் பங்கும் இருக்கும் எனச் சந்தேகிக்கிறோம். இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

இந்த வழக்கில் சிக்கியுள்ள லூ சாங் என்ற சீன நாட்டவா், மணிப்பூரில் வசிப்பதாகக் கூறி போலி கடவுச் சீட்டு, ஆதாா் அட்டை, பான் அட்டை ஆகியவற்றைப் பெற்றுள்ளாா்.

இந்த ஆவணங்கள் மூலம் அவா் சுமாா் 40-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளைத் தொடக்கியுள்ளாா். வங்கி அதிகாரிகளின் நெருங்கிய தொடா்பு இல்லாமல் இந்த வங்கிக் கணக்குகளைத் தொடங்க முடியாது. மேலும், இந்தியாவில் இயங்கும் சில மின் வணிக நிறுவனங்களும் சீன அரசுடன் ரகசியக் கூட்டுச் சோ்ந்து இயங்குகின்றன. ஹவாலா பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் முழுமையான, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதை வலியுறுத்தி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.