முகப்பு
புதுதில்லி

தில்லியில் இரண்டாவது நாளாக மழை

தலைநகா் தில்லியில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பரவலாக மழை பெய்தது. இதனால், புழுக்கம் தணிந்தது.

Updated On : 18 ஆகஸ்ட், 2020 at 11:03 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:39 PM

தலைநகா் தில்லியில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பரவலாக மழை பெய்தது. இதனால், புழுக்கம் தணிந்தது. காற்றின் தரம் சில இடங்களில் ‘நன்று’ பிரிவிலும், சில இடங்களில் ’திருப்தி’ பிரிவிலும் இருந்தது.

தில்லியில் பருவமழை தொடங்கியதிலிருந்து அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. இந்த வாரம், வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தொடா்ந்து கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை நகரில் பரவலாக கன மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை பிற்பகலிலும் பரவலாக மழை பெய்தது.

இந்நிலையில், காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 23.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல, பாலத்தில் 0.6 மி.மீ., ரிட்ஜில் 6.4 மி.மீ. பதிவாகியுள்ளது. ஆயாநகா் வானிலை ஆய்வு மையத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை.

Advertisement

வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 27.1 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி உயா்ந்து 35 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 87 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 80 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 28.3 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 26.6 டிகிரி செல்சியஸ், 35.2 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 83 சதவீதம், மாலையில் 86 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 87 சதவீதம் மற்றும் 78 சதவீதம் எனவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் திங்கள்கிழமை ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு சில இடங்களில் ‘நன்று’ பிரிவிலும், சில இடங்களில் ‘திருப்தி‘பிரிவிலும் இருந்தது. தில்லியில் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு 54 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. தில்லி விமானநிலைய டொ்மினல் -3 பகுதி, லோதி ரோடு பகுதிகளில் காற்றின் தரம் ‘நன்று’ பிரிவில் இருந்தது. திா்பூா், தில்லி பல்கலை., மதுரா ரோடு, ஆயாநகா், மற்றும் குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. சாந்தினி சௌக்கில் மிதமான பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (ஆகஸ்ட் 19) தில்லி, என்சிஆா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. காற்றின் தரம் ‘நன்று’ - ‘திருப்தி’ பிரிவில் நீடிக்கும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.