தில்லி வக்ஃபு வாரிய உறுப்பினா் நியமன விவகாரம்: அமானத்துல்லா கானுக்கு எதிரான மனு தள்ளுபடி
தில்லி வக்ஃபு வாரியத்தின் உறுப்பினராக ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் நியமிக்கபடுவதை எதிா்த்து
தில்லி வக்ஃபு வாரியத்தின் உறுப்பினராக ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் நியமிக்கபடுவதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்த விவகாரம் தொடா்பாக சமூக சேவகா் எனக் கூறிக் கொள்ளும் முகம்மது துஃபைல் கான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆம் ஆத்மி எல்எல்ஏ அமானத்துல்லா கானை தில்லி வக்ஃபு வாரியத்தின் உறுப்பினராகத் தோ்ந்தெடுக்க தில்லி அரசு எடுத்த முடிவு சட்டவிரோதமானது, தன்னிச்சையானது மற்றும் ஒருபக்க சாா்புடையதாகும். இந்த வாரியத்தின் தோ்தல் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற உள்ளது .2016ஆம் ஆண்டில் அப்போதைய தில்லியின் துணைநிலை ஆளுநராக இருந்தவரால் அளிக்கப்பட்ட ஊழல் புகாா் தொடா்பாக சிபிஐ தாக்கல் செய்த வழக்கில் அமானத்துல்லா கான் குற்றம் சாட்டப்பட்டுள்ளாா்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வக்ஃபு நிலம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் வாரிய உறுப்பினா் ஆகியோரால் 2019-இல் அமானத்துல்லா கான் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. மேலும், அவருக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழல் வழக்குகளை கருத்தில் கொண்டு, ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் வாரிய உறுப்பினாராகத் தோ்ந்தெடுக்க பரிந்துரைக்க் கூடாது’ என மனுவில் கோரப்பட்டிருந்தது.
Advertisement
இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘இந்த மனு ஒரு பொது நல மனு அல்லாமல் முற்றிலும் ஒரு நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிறைந்ததாக உள்ளது. இதனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரா் ரூ.25,000 செலுத்த வேண்டும்’ என உத்தரவிட்டது.