அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!
தில்லியில் மாரத்தானை தொடக்கி வைத்து ராகுல் காந்தி பேசியது குறித்து...
தில்லியில் "அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்" என்ற பெயரிலான மாரத்தானை காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கொடியசைத்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்.12) தொடக்கி வைத்தார்.
காங்கிரஸ் சார்பில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, நடத்தப்படும் இந்த மாரத்தான் ஓட்டம், சமத்துவம் மற்றும் சமூக நீதியை வலியுறுத்தி மாண்டி ஹவுஸில் இருந்து தொடங்குகிறது
இந்நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கொள்கைகளுடன் தொடர்புடையவர்கள் அம்பேத்கரையும் அரசியலமைப்பையும் பலவீனப்படுத்த முயல்கின்றனர் என்று குற்றம் சாட்டியதோடு, அம்பேத்கரின் மையக் கருத்து அனைத்து குடிமக்களுக்குமான சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் வலியுறுத்தினார்.
Advertisement
மேலும் பேசிய அவர், ”அம்பேத்கரின் மையக்கருத்தாக அரசியலைப்புச்சட்டம்தான் இருந்தது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கொள்கைகைளுடன் இருப்பவர்கள் அம்பேத்கரின் அரசியலமைப்பை சீர்குலைக்கின்றனர்.
நாட்டில் அனைவரும் சமத்துவமாக இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் என்ன செய்தாலும், அதாவது அம்பேத்கர் சிலைக்கு முன்னால் கைக்கூப்பி நிற்பதுகூட அரசியலமைப்பை அழிக்கும் ஒரு முயற்சியே” எனத் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் காங்கிரஸ் தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான முகமது அசாருதீன் மற்றும் ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திக்காராம் ஜூலி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.