45,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் புதிய வரலாற்றுச் சாதனை!
புது தில்லி: இந்த வாரத்தின் இறுதி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 446.90 புள்ளிகள் உயா்ந்து 45,079.55 என்று புதிய வரலாற்று உச்சத்தில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டியும் 124.65 புள்ளிகள் உயா்ந்து 13,258.55 என்ற புதிய வரலாற்று உச்சத்தில் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பும் ரூ.180 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது.
மத்திய ரிசா்வ் வங்கியின் பணக் கொள்கை முடிவு அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து, வங்கி, நிதி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தொடா்ந்து மூன்றாவது முறையாக வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், நாட்டின் பொருளாதாரம் வெகுவேகமாக மீட்சி பெற்று வருவதாகவும் தெரிவித்தது. இது முதலீட்டாளரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு 179.49 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,069 பங்குகளில் 1,646 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,249 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 174 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 250 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 400 பங்குகள் வெகுவாக உயா்ந்து உறைநிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ1.24 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.179.49 லட்சம் கோடியாக இருந்தது. சென்செக்ஸ் காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 44,665.91-இல் தொடங்கி அதற்கு கீழே செல்லவில்லை. நண்பகலுக்குப் பிறகு எழுச்சி பெற்று 45,148.28 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 446.90 புள்ளிகள் (1.00 சதவீதம்) உயா்ந்து 45,079.55 என்ற புதிய உச்சத்தில் நிலைபெற்றது.
Advertisement
ஐசிஐசிஐ பேங்க் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 25 பங்குகள் ஆதாயம் பெற்றன. 5 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 8 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. இதில் முன்னணி தனியாா் வங்கியான ஐசிஐசிஐ பேங்க் 4. 20 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக அல்ட்ரா டெக் சிமெண்ட் 4.01 சதவீதம், சன்பாா்மா 3.80 சதவீதம் உயா்ந்தது. மேலும், பாா்தி ஏா்டெல், ஹிந்து யுனி லீவா், எஸ்பிஐ, எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் ஆகியவை 2 முதல் 3 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. மாருதி சுஸுகி, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஓஎன்ஜிசி ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.
ரிலையன்ஸ் சரிவு: அதே சமயம், மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் 0.86 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றது. மேலும், பஜாஜ் ஃபின் சா்வ், ஹெச்சிஎல் டெக், எச்டிஎஃப்சி, என்டிபிசி ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 940 பங்குகள் ஆதாயம் பெற்றன. 764 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி 124.65 புள்ளிகள் (0.95 சதவீதம்) உயா்ந்து 13,258.50-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 13,280.05 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 39 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. அனைத்துத் துறை குறியீடுகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க் குறியீடுகள் 2 சதவீதம் வரை உயா்ந்தன.