அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறுவாக்குப்பதிவு! எங்கு, ஏன்?
அஸ்ஸாமில் ஒரேயொரு வாக்குச்சாவடியில் மட்டும் ஏப்.11 அன்று மறுவாக்குப்பதிவு...
அஸ்ஸாமின் கரீம்கஞ்ச் (வடக்கு) சட்டப்பேரவைத் தொகுதியின் ஒரேயொரு வாக்குச்சாவடியில் மட்டும் ஏப்.11 அன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை (ஏப். 9) அன்று நடைபெற்றது. 126 பேரவைத் தொகுதிகளுக்கு, 2.5 கோடி வாக்காளர்களைக் கொண்ட அஸ்ஸாமில் 85.91 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீபூமி மாவட்டத்தில் உள்ள கரீம்கஞ்ச் (வடக்கு) சட்டப்பேரவைத் தொகுதியின், ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது ஆளுங்கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல்கள் வெடித்தன.
Advertisement
இந்த நிலையில், அஸ்ஸாமின் 239 ஆவது வாக்குச்சாவடியான பேபிலேண்ட் ஹை இங்கிலீஷ் பள்ளியில் வரும் ஏப்.11 அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை (ஏப். 10) அன்று அறிவித்துள்ளது.
முன்னதாக, 14 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள கரீம்கஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக, காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயூடிஎஃப்) ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.