பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்
பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளதைப் பற்றி...
பச்சை துண்டுப் போட்டு, விவசாயிகளுக்குப் பச்சை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஆளும் திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, புதுவரவான தவெக உள்ளிட்ட கட்சிகள் மிகத் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அந்தந்த அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
Advertisement
தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களான திருவிடைமருதூர் - கோவி.செழியன் (திமுக), கும்பகோணம் - அன்பழகன் (திமுக), பாபநாசம் - ஷாஜகான் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), திருவையாறு - துரை.சந்திரசேகர் (திமுக), தஞ்சாவூர் - சண்.இராமநாதன் - (திமுக), ஒரத்தநாடு - வைத்திலிங்கம் (திமுக), பட்டுக்கோட்டை - அண்ணாதுரை (திமுக), பேராவூரணி - அசோக்குமார் (திமுக) உள்ளிட்டோரை ஆதரித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
தஞ்சாவூர் திலகர் திடலில் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தஞ்சை தரணிக்கு வந்தாலே தனி கம்பீரம் பிறக்கிறது. யானைக் கட்டி போரடித்த மண் தஞ்சாவூர். ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் ஆண்ட மண். தமிழர்களின் கம்பீரத்துக்கு சோழர்களே காரணம் திராவிட மாடல் நல்லாட்சி தொடர வேண்டும் என்று தமிழகமே சொல்கிறது; தஞ்சையும் ரெடியா?.
நீங்கள் தஞ்சை மாவட்டத்தில் நூறு சதவிகித வெற்றியை மட்டும் கொடுங்கள். தஞ்சையின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. நம்முடைய சாதனைகளையும் சொல்லும் இந்த நேரத்தில் அதிர்ச்சியான செய்தியும் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது.
கடலூர், சீர்காழி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஊர்களில் பிரசாரத்தை முடித்துவிட்டு சென்னை சென்றதும் அதிகாரிகள் என்னிடம் ஒரு கடித்ததைக் காண்பித்தார்.
அதில், எடப்பாடி பழனிசாமியின் உரிமையாளராக இருக்கிறார்களே மத்திய பாஜக அரசு, அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிய கடிதம் அது. இப்படிகூட ஒருவர் யோசிக்க முடியுமா என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசு நெல்லுக்கு வழங்கக்கூடிய ஊக்கத்தொகையால் நெல் உற்பத்தி நிறைய பெருகி வருகிறதாம். அதனால், பல்வேறு பிரச்சினைகள் உருவாகிறதாம்.
இதனால், தமிழ்நாடு அரசு நெல்லுக்கு வழங்குகின்ற ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என்று கூறி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் நிதியமைச்சகம் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கிறது. இதனை எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாரா? அவர் அவதூறு பேசுவதற்கு மட்டும்தான் வாய் திறப்பாரா?
நான்கு ஆண்டு காலம் முதல்வராக இருந்த போலி விவசாயி எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், வேளாண் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ஊக்கத்தொகையை ஒரு ரூபாய்கூட அவர் உயர்த்தவில்லை. பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி. விவசாயிகளுக்கு பழனிசாமி செய்த துரோகம் ஒன்றா.. இரண்டா.. விவசாயிகளுக்கு பழனிசாமி செய்த துரோகத்தைச் சொல்வதற்கு ஒருநாள் போதாது” என்றார்.