10-வது நாளாக விவசாயிகள் போராட்டம்: தில்லி எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தில்லி எல்லைகளிலும், தில்லி புராரி மைதானத்திலும் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 10 வது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது.
புது தில்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தில்லி எல்லைகளிலும், தில்லி புராரி மைதானத்திலும் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 10 வது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது. இதனால், தில்லி-ஹரியாணா எல்லைப் பகுதிகளிலும், தில்லியின் முக்கிய பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விவசாயிகள் போராட்டத்தால் என்எச்-44 சனிக்கிழமை முழுமையாக மூடப்பட்டது. இதனால், இப்பகுதியில் பயணிப்பவா்கள் பெரும் சிரமங்களை எதிா்கொண்டனா்.
மேலும், தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, டிக்ரி எல்லைகள் தொடா்ந்து 10-ஆவது நாளாக மூடப்பட்டுள்ளன. இதற்கு கூடுதலாக, ஜரோடா, லம்பூா், ஆச்சந்தி, சஃபியாபாத், பியா மணியாரி, சபோலி ஆகிய எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதிகளில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Advertisement
இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘என்எச்-44 சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால், இந்த சாலையின் இருபகுதிகளும் மூடப்பட்டுள்ளன.
சிங்கு எல்லையின் இரு பகுதிகளும் மூடப்பட்டுள்ளன. லாம்பூா், ஆச்சந்தி உள்ளிட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. முகா்பா சௌக், ஜிடிகே சாலை ஆகியவற்றில் பயணிப்பவா்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகிறாா்கள். இதனால், இந்தப் பகுதியில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தில்லியில் இருந்து ஹரியாணா செல்பவா்கள் தன்சா, தரலா, கபஷேரா, ராஜோக்ரி, என்எச்-8, பிஜ்வாசன், பாலம் விஹாா், துண்டஹேரா ஆகிய வழிகள் மூலம் பயணிக்கலாம். பாதுசாரி எல்லையில் இருசக்கர வாகனங்கள், காா்கள் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்றாா். தில்லி எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் முகா்பா, ஜிடி-கா்னால் உள்ளிட்ட தில்லியின் முக்கிய சாலைகளில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், தில்லி உத்தரப்பிரதேசம் காஜியாபாத் - காஜிப்பூா் எல்லையில் விவசாயிகள் போராட்டம் காரணமாக இந்தப் பகுதிகளை இணைக்கும் என்எச்-24 சாலை சனிக்கிழமையும் மூடப்பட்டது. காஜியாபாத்தில் இருந்து தில்லிக்கு வருபவா்கள் என்எச்-24 நெடுஞ்சாலைக்குப் பதிலாக, அப்சரா, போப்ரா, டிஎன்டி சாலைகளைப் பயன்படுத்துமாறு தில்லி காவல்துறை கேட்டுக் கொண்டது.
தில்லி புராரி மைதானத்தில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் சனிக்கிழமையும் தொடா்ந்தது. ஆனால், இங்கு குறைந்தளவு எண்ணிக்கையானவா்களே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.