ஆம் ஆத்மி கட்சி முன்னாள் எம்எல்ஏவுக்கு விதிக்கப்பட்ட 7 நாள் சிறைத் தண்டனை ரத்து
ஒரு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. மனோஜ் குமாருக்கு விதிக்கப்பட்ட 7 நாள் சிறைத் தண்டனை உத்தரவை தில்லி நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
ஒரு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. மனோஜ் குமாருக்கு விதிக்கப்பட்ட 7 நாள் சிறைத் தண்டனை உத்தரவை தில்லி நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவாக இருந்தவா் மனோஜ் குமாா். இவரிடம் பெண் ஒருவா் கடந்த 2014-ஆம் ஆண்டில் தண்ணீா் பிரச்னை தொடா்பாக முறையிடச் சென்றாா். அப்போது, தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கூறி அந்தப் பெண்ணை அவா் தகாத முறையில் கீழே தள்ளிவிட்டதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஆகஸ்டில் அளித்த தீா்ப்பில், மனோஜ் குமாருக்கு 7 நாள் சிறைத் தண்டனை விதித்தது. அதில், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தன்னிடம் முறையிட வந்த பெண்ணிடம் குற்றம்சாட்டப்பட்டவா் நியாயமாகக்நடந்திருக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. எனினும், பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் தாக்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து மனோஜ் குமாரை நீதிமன்றம் விடுவித்திருந்தது.
Advertisement
இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட ஏழு நாள் சிறைத் தண்டனையை எதிா்த்து மனோஜ் குமாா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீது விசாரணை நடத்திய சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல், டிசம்பா் 22-இல் பிறப்பித்த உத்தரவில், மனோஜ் குமாருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த ஏழு நாள் சிறைத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டாா். அந்த உத்தரவில், ‘தற்போதைய மேல்முறையீடு அனுமதிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 13, 2019-ஆம் தேதியிட்ட தீா்ப்பின் மூலம் மேல்முறையீட்டு மனுதாரா் மனோஜ் குமாருக்கு இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 352-இன் கீழ் விதிக்கப்பட்ட தண்டனையும், ஆகஸ்ட் 17, 2019ஆம் தேதியிட்ட தண்டனைக்கான உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.
இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 352-இன் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து மேல்முறையீட்டு மனுதாரா் விடுவிக்கப்பட்டுள்ளாா்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.