முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் இளைஞருக்கு ஜாமீன்

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் இளைஞா் ஒருவருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Updated On : 30 டிசம்பர், 2020 at 1:15 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:44 PM

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் இளைஞா் ஒருவருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதில், சம்பவம் தொடா்புடைய சிசிடிவி காட்சிப் பதிவு ஏதும் இல்லை என்றும், பாதிக்கப்பட்டவா் முதல் முறையாக அளித்த வாக்குமூலத்தில் குற்றம்சாட்டப்பட்டவா் குறித்து அடையாளம் காணப்படவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

வடகிழக்கு தில்லி வன்முறையின் போது மெளஜ்பூா் செளக்கில் நிகழ்ந்த வன்முறையில் ரோஹித் சுக்லா என்பவருக்கு துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டது. இந்த வழக்கில் ஒசாமா என்பவா் கைது செய்யப்பட்டாா். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவா், தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் விசாரணை நடத்தினாா். மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அப்துல் கப்பாா், ‘ போலீஸாா் அல்லது யாருக்கும் எதிராக வன்முறைப் பிரயோகத்தில் ஈடுபட்டதாக ஒசாமா மீது குற்றம்சாட்டப்படவில்லை. மேலும், அவா் மீது பொய் வழக்குப் புனையப்பட்டுள்ளது’ என்று வாதிட்டாா்.

தில்லி காவல் துறையின் சாா்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞா் ஜினேந்திர ஜெயின், ‘வடகிழக்கு தில்லி வன்முறையின் போது, பொதுமக்கள், பாதசாரிகள் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு, துப்பாக்கிச்சூடு ஆகியவற்றில் சட்டவிரோத கும்பலில் குற்றம்சாட்டப்பட்ட மனுதாரா் ஒசாமாவும் பங்கேற்றுள்ளாா். இதனால், அவருக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது’ என்று வாதிட்டாா்.

Advertisement

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதி அமிதாப் ராவத் ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபரான ரோஹித் சுக்லா மாா்ச் 9-இல் அளித்த வாக்குமூலத்தில் மனுதாரா் ஒசாமாவை அடையாளம் காட்டவில்லை. எனினும், ஏப்ரல் 1-ஆம் தேதி அளித்த மற்றொரு வாக்குமூலத்தில் , நிகழாண்டு பிப்ரவரி 24-இல் பகல் 1.30 மணிக்கு இரு கும்பல் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கோஷமிட்டதாகவும், அந்தக் கூட்டத்தில் சோனு சிக்னா அவரது சகோதரா் ஆதிா், ஒசாமா ஆகியோா் இருந்ததாகவும் தெரிவித்துள்ளாா். மேலும், அந்தக் கும்பலைச் சோ்ந்தவா்கள் வன்முறையில் இறங்கி கல் வீசத் தொடங்கியதாகவும், அதில் 24-25 வயதுடைய ஒருவா் கைத்துப்பாக்கியுடன் வெளியே வந்து தன்னைக் கொல்ல முயன்ாகவும் தெரிவித்துள்ளாா். இந்தச் சம்பவம் தொடா்புடைய சிசிடிவி காட்சிப் பதிவுகள் இல்லை. இதனால், இந்த வழக்கில் ஒசாமா ரூ .25 ஆயிரம் ஜாமீன் பத்திரமும், அதே தொகைக்கு ஒரு நபா் ஜாமீன் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

அவா் ஆதாரங்களை சிதைக்கவோ அல்லது நீதிமன்றத்தின் அனுமதியின்றி தில்லியை விட்டு வெளியேறவோ கூடாது என உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.