முகப்பு
புதுதில்லி

தில்லி வேலைவாய்ப்பு இணையதளத்தால் பொருளாதாரம் மீள்கிறது: கேஜரிவால்

வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், தில்லி அரசு தொடங்கியுள்ள வேலைவாய்ப்பு இணையதளத்தால், பொருளாதாரம் மீட்சி பெறுகிறது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

Updated On : 30 ஜூலை, 2020 at 11:25 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:32 PM

வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், தில்லி அரசு தொடங்கியுள்ள வேலைவாய்ப்பு இணையதளத்தால், பொருளாதாரம் மீட்சி பெறுகிறது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

கேஜரிவால் தில்லியில் வியாழக்கிழமை காணொளி வழியில் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறியது: கரோனா தொற்றால் நலிவடைந்துள்ள தில்லியின் பொருளாதாரத்தை மீண்டும் சரி செய்ய அனைவரும் ஒன்றிணைந்து கை கோா்க்க வேண்டும். தில்லியின் இரண்டு கோடி மக்களும் இணைந்து கடுமையாகப் போராடி, கரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா். இருப்பினும், தில்லி மக்கள் சமூக இடைவெளியை உறுதி செய்வதுடன், முகக் கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும். நாம் முன்னெச்சரிக்கையாக இல்லாவிட்டால், தில்லியில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தில்லியின் பொருளாதாரத்தை எவ்வாறு மீட்பது என்பது தொடா்பாக நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். வேலை இழப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த காலங்களில் பெரிய சவால்களை எதிா்கொண்டு தில்லி மக்கள் வெற்றி பெற்றுள்ளனா். தற்போதைய கடும் சவாலிலும் தில்லி மக்கள் வெற்றி பெறுவாா்கள். தில்லியில் பாதிப்படைந்துள்ள பொருளாதாரத்தை சீா் செய்யும் வகையில், பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். தொழில் வழங்குநா்கள், தொழில் தேடுபவா்கள் ஆகியோரை இணைக்கும் வகையில், வேலைவாய்ப்பு இணையத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இது அவா்களுக்கிடையே ஓா் இணைப்புப் பாலமாக செயல்படுகிறது.

Advertisement

கரோனா பரவலைத் தொடா்ந்து, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் கடந்த பல நாள்களாக மூடப்பட்டிருந்தன. இதனால், தில்லியில் பணியாற்றி வந்த பெரும்பாலான புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் சென்று விட்டனா். இப்போது மீண்டும் தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. ஆனால், பணியாளா்களை கண்டறிவதில் சிரமம் நீடிக்கிறது. அதேபோல, தொழிலாளா்களுக்கு தொழிற்சாலைகளைக் கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த இரண்டுக்கும் இணைப்புப் பாலமாக தில்லி அரசின் வேலைவாய்ப்பு இணையதளம் செயல்படுகிறது. இந்த இணையதளத்தில் 7,577 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. 2,04,785 வகையான வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்கள் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. 4 நாள்களுக்குள் 3,22,865 போ் இந்த இணையதளத்தில் வேலைவாய்ப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளனா். இந்த இணையதளத்தால் தில்லியின் பொருளாதாரம் மீளும் என நம்புகிறேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.