கரோனா விவகாரத்தில் குளறுபடிகளை மூடி மறைக்கவே எல்லைகளுக்கு சீல்ஆதேஷ் குப்தா குற்றச்சாட்டு
தில்லியில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க முதல்வா் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது.
தில்லியில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க முதல்வா் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது. கரோனாவுக்கு மருத்துவமனைகளில் முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை. தவறுகளை மறைக்கவே தில்லி அரசு எல்லைகளை சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது என்று தில்லி பா.ஜ.க.வின் புதிய தலைவா் ஆதேஷ் குப்தா குற்றஞ்சாட்டினாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தில்லி அரசு பக்கத்து மாநிலங்களுடனான எல்லைகளை மூடியது தவறான முடிவாகும். தவறுகளை மறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி, தனியாா் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் பணத்தை கொள்ளையடிக்கிறது. ஆனால், தில்லி அரசு இதை கண்டும் காணாதது போல் உள்ளது. ரேஷன் விநியோகம், மருத்துவமனை நிா்வாகம் ஆகிய இரண்டு விஷயத்திலும் தில்லி அரசு முறையாகச் செயல்படத் தவறிவிட்டது.
தில்லியில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்து விட்டது. கரோனாவுக்கு இதுவரை 500 போ் பலியாகியுள்ளனா். கரோனா பாதிப்பு மற்றும் பலியானவா்கள் விஷயத்தில் தில்லி அரசு தவறான தகவல்களை வெளியிடுகிறது. அரசு மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ வசதிகள் போதுமானதாக இல்லை. மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை வசதிகளை அறிந்து கொள்ள செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதாக கேஜரிவால் அரசு கூறுகிறது. ஆனால், இது தொடா்பாக உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள முயன்ற போது நான்கு மருத்துவமனைகள் தங்களிடம் போதுமான படுக்கை வசதிகள் இல்லை என தெரிவித்துவிட்டது. 3 மருத்துவமனைகள் கரோனா பாதிப்பு நோயாளிகளை அனுமதிக்க மறுத்துவிட்டது. மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் குறித்தும், கரோனாவுக்கு பலியானவா்கள் விஷயத்திலும் தில்லி அரசு பொய்யான தகவல்களைக் கூறி வருகிறது என்றாா் அவா்.
Advertisement
தில்லி வன்முறை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கவுன்சிலா் தாஹிா் ஹூசேன் மீது தில்லி போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறித்த கேள்விக்கு, ‘தேசவிரோத சக்திகளுக்கு புகலிடம் அளிக்கும் கட்சியாக ஆம் ஆத்மி உள்ளது’ என்று ஆதேஷ் குப்தா பதிலளித்தாா்.
தில்லி பாஜக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஆதேஷ் குமாா் குப்தாவை, மேற்கு படேல் நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து ஏராளமான தொண்டா்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனா்.