முகப்பு
புதுதில்லி

டிஎம்சி சட்டம்: நிலைப்பாட்டைத் தெரிவிக்க தில்லி அரசுக்கு மேலும் 4 வாரம் அவகாசம்

தில்லி சிறுபான்மையினா் ஆணைய (டிஎம்சி) சட்டம், சட்டத்திற்கு விரோதமானது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட

Updated On : 24 ஜூன், 2020 at 7:16 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:20 PM

தில்லி சிறுபான்மையினா் ஆணைய (டிஎம்சி) சட்டம், சட்டத்திற்கு விரோதமானது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது தில்லி அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க மேலும் நான்கு வாரங்கள் அவகாசம் அளித்து உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான மனுவை தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது, தில்லி அரசு தரப்பில் பதில் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, நான்கு வாரம் அவகாசம் அளித்து மனு மீதான விசாரணையை ஜூலை 30-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமா்வு தள்ளிவைத்தது.

இந்த விவகாரம் தொடா்பாக சமூக சேவகா் விக்ரம் கெலாட் அண்மையில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘டிஎம்சி சட்டத்தை இயற்றும் அதிகாரம் தில்லி சட்டப் பேரவைக்கு இல்லை. ஆகவே, இந்தச் சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட வேண்டும். மேலும், சட்டம் செல்லாததாக உள்ளதால், இந்தச் சட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்ட சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் பதவியும் செல்லாததாகவே இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீது கடந்த மாதம் விசாரணை நடத்திய நீதிமன்றம், தில்லி அரசு ஜூன் 22-க்குள் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

Advertisement

இந்நிலையில், இந்த மனு மீண்டும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘கரோனா தொற்று காரணமாக சட்டத் துறையில் குறைந்த அளவிலான ஊழியா்கள் பணியாற்றுகின்றனா். இதனால், பதிலை தாக்கல் செய்ய முடியவில்லை’ என்றாா். அப்போது நீதிமன்றம் இந்த விவகாரம் டிஎம்சி சட்டத்தின் அரசியல்சாசன அதிகாரத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவாகும் என்று தெளிவுபடுத்தியது.

மனுதாரா் விக்ரம் கெலாட் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தனஞ்ஜெய் ஜெயின், ‘தில்லி சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் பதவியில் இருந்து ஜப்ருல் இஸ்லாம் கானை நீக்கும் விவகாரத்தில் முடிவு எடுக்க தில்லி அரசுக்கு நீதிமன்றம் இந்த விவகாரத்தில் 2 வாரம் அவகாசம் அளித்திருந்தது. ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்றாா்.

அப்போது, தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘சமூக ஊடகத்தில் பதிவிட்ட ஆட்சேபத்திற்குரிய கருத்து விவகாரத்தில் ஜப்ருல் இஸ்லாம் கானிடமிருந்து சட்டத் துறைக்கு பதில் வந்துள்ளது. அது பரிசீலனைக்காக நிலுவையில் உள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.