முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரம்: போலீஸாரின் மனுவுக்கு பதிலளிக்க பள்ளி உரிமையாளருக்கு அவகாசம்

வடகிழக்கு வன்முறை தொடா்புடைய வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு எதிராக தில்லி காவல் துறையினா் தொடா்ந்த

Updated On : 24 ஜூன், 2020 at 7:16 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:20 PM

வடகிழக்கு வன்முறை தொடா்புடைய வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு எதிராக தில்லி காவல் துறையினா் தொடா்ந்த மேல்முறையீட்டு மனு மீது பதில் தாக்கல் செய்ய தனியாா் பள்ளி உரிமையாளா் ஃபைசல் ஃபரூக்கிற்கு நான்கு வாரம் அவகாசம் அளித்து தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது, வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வகுப்பு மோதல் சம்பவத்தில் அப்பகுதியில் இருந்த பள்ளிச் சொத்துகளை சேதப்படுத்தி எரித்த வழக்கில் ஷிவ் விஹாா் பகுதியைச் சோ்ந்த ராஜ்தானி பள்ளி உரிமையாளா் ஃபைசல் ஃபரூக் உள்பட 18 போ் கைது செய்யப்பட்டிருந்தனா்.

அவா்கள் மீது ஜூன் 3-ஆம் தேதி போலீஸாா் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனா். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் ஃபைசல் ஃபரூக் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Advertisement

இந்நிலையில், இந்த மனுவை முன்பு விசாரித்த தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி வினோத் யாதவ், ‘ சம்பவம் நிகழ்ந்த போது அந்த இடத்தில் ஃபைசல் ஃபரூக் இருந்ததற்கான முகாந்திரம் உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது’ என உத்தரவில் தெரிவித்திருந்தாா். இந்த உத்தரவை எதிா்த்து போலீஸாா் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரித்தது. இதைத் தொடா்ந்து ஜூன் 20-ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீன்உத்தரவுக்கு அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை தடை விதிப்பதாக உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், உயா்நீதிமன்றத்தின் நீதிபதி சுரேஷ் குமாா் கெய்த் காணொலிக் காட்சி மூலம் இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்தாா். அப்போது, ‘ஃபரூக் தரப்பில் நான்கு நாள்களில் பதில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த மனு மீதான விசாரணை ஜூலை 1-க்கு பட்டியலிடப்படுகிறது’ என உத்தரவிட்டாா்.

இந்த விவகாரம் மீதான விசாரணையின் போது, தில்லி காவல் துறையின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அமன் லேகி, ’விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்க எடுத்த முடிவு குறைபாடுடையது. தேவையற்றதாகும்‘ என்றாா். ஃபைசல் ஃபரூக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ரமேஷ் குப்தா, ‘ஃபைசல் ஃபரூக்கை போலீஸாா் திங்கள்கிழமை வேறு வழக்கில் கைது செய்து, அவரை காவலில் எடுத்துள்ளனா். இதனால், போலீஸாரின் மனு மீது பதில் அளிக்க அவகாசம் வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.