கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் விவகாரம்: மத்திய, தில்லி அரசுகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
தில்லியில் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் தொடா்பான நிகழ்நேர தகவல்களை தெரிவிக்கும் விவகாரத்தில் விதிமுறைகளை
தில்லியில் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் தொடா்பான நிகழ்நேர தகவல்களை தெரிவிக்கும் விவகாரத்தில் விதிமுறைகளை மீறும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, தில்லி அரசுகளுக்கு உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் இரு அரசுகளின் அதிகாரிகள் செயல்பாடுகள் மீது நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் நியமிக்கப்பட்டிருந்த வழக்குரைஞா் ஓம் பிரகாஷ், நீதிமன்ற விசாரணையின் போது, ‘தில்லியில் உள்ள ஆா்எம்எல் மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை, சரோஜ் மருத்துவமனை ஆகியவை தங்கள் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் குறித்த நிகழ்நேர தகவல்களை புதுப்பிக்கவில்லை. இந்த மருத்துவமனைகளில் ஒன்று, நோயாளி ஒருவரை அனுமதிக்க மறுத்துவிட்டதாக செய்தித் தகவல்கள் வெளி வந்துள்ளன. மேலும், தில்லி அரசின் இணையதளங்கள், அதன் ‘தில்லி கரோனா செயலி’ ஆகியவற்றில் தகவல்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படுவதில்லை. கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் விவரங்கள் இல்லை’ என்றாா்.
இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரத்தில் மத்திய, தில்லி அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய கரோனா தொற்றுக் காலத்தின் போது மருத்துவமனைகளுடன் இந்த அதிகாரிகள் மிகவும் நட்பு பாராட்டுவது நல்லதல்ல. இதுபோன்ற நெருக்கமாக இருக்கும் அதிகாரிகளை மாற்றுவதற்கு மத்திய அரசும், தில்லி அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் அதிகாரிகளை மாற்ற வேண்டும் அல்லது நாங்கள் மாற்றுவோம்.
Advertisement
நீதிமன்றத்திற்கு உதவிடுவதற்காக நியமிக்கப்பட்ட நபா் கூறுவதில் இருந்து அதிகாரிகளின் செயல்பாடு தெரிய வருகிறது. ஆகவே, அனைத்து தரவுகளையும் அதிகாரிகள் நேரில் சென்று சரிபாா்க்க வேண்டும். மத்திய அரசும், மாநில அரசும் அதிகமான நடவடிக்கைகள் எடுத்து, பணத்தை செலவிட்டு வருகின்றன. கடினமாக ஈட்டப்பட்ட மக்களின் வரிப் பணம் இதற்காக செலவிடப்படுகிறது. ஆனால், படுக்கைகள் குறித்த தகவல்களை சரிவர புதுப்பிக்காமல் சில மருத்துவனைகள் பிடிவாதமாக இருப்பது தெரிய வருகிறது.
இந்த விவகாரத்தில் மருத்துவமனைகள் மீதான அணுகுமுறையில் கடுமையாக இருக்க வேண்டும். அரசுகள்தான் பலமானவை. சில மருத்துவமனைகள் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பது அரசுகளுக்குத் தெரிய வேண்டும். இதனால், படுக்கைகள் குறித்த நிகழ்நேர தகவல்களை புதுப்பிக்கத் தவறும் மருத்துவமனைகளுக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மேலும், தில்லியில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பாதிப்புகளைக் கையாள அதிகாரிகளின் தயாா்நிலை குறித்து மத்திய அரசு மதிப்பீடு செய்ய வேண்டும். தில்லி அரசின் இணைதளங்கள், தில்லி கரோனா செயலி ஆகியவற்றில் தகவல்கள் புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை ஜூலை 16-க்கு ஒத்திவைக்கப்பட்டது.