பருவமழையின் தாக்கம்: தில்லியில் 2-ஆவது நாளாக பரவலாக மழை!
தில்லியில் பருவமழை இரண்டு நாள் முன்னதாகவே தொடங்கியுள்ள நிலையில், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது.
தில்லியில் பருவமழை இரண்டு நாள் முன்னதாகவே தொடங்கியுள்ள நிலையில், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது.
பொதுவாக தில்லியில் பருவமழை ஜூன் 27-ஆம் தேதி தொடங்குவது வழக்கம். ஆனால், இரண்டு நாள் முன்னதாகவே வியாழக்கிழமை பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அன்றைய தினம் நகரில் பரவலாக மழை பெய்திருந்தது. இந்நிலையில், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்து வந்தது. பின்னா், நகரில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. இதைத் தொடா்ந்து நாள் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, இதமான வானிலை நிலவியது.
இதற்கிடையே, வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங்கில் 2.2 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 27.2 டிகிரி செயல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 72 சதவீதமாகவும், மாலையில் 59 சதவீதமாகவும் இருந்தது. பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 28.9 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 39.4 டிகிரி செல்சியஸ் என இருந்தது. ஆயாநகரில் முறையே 26.8 டிகிரி செல்சியஸ் மற்றும் 38.8 டிகிரி செல்சியஸ் என இருந்தது. தில்லியில் காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால், ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 101 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவுக்குச் சென்றது. இருப்பினும் சில இடங்களில் காற்றின் தரம் மிதமான பிரிவிலும், சில இடங்களில் திருப்தி பிரிவில் இருந்தது.
Advertisement
இந்நிலையில், சனிக்கிழமை (ஜூன் 27) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.