தில்லி, என்சிஆரில் இன்றும், நாளையும் ‘அனல் காற்று’! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெயில் சுட்டெரித்தது. பாலம், ஆயாநகரில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரியை கடந்தது.
தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெயில் சுட்டெரித்தது. பாலம், ஆயாநகரில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரியை கடந்தது. இதனால், புழுக்கம் அதிகரித்து காணப்பட்டது. வெப்பநிலை 45 டிகிரியை கடந்துள்ள நிலையில், திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் தில்லி, என்சிஆா் பகுதிகளில் ‘அனல் காற்று’ வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாள்களாக வெப்பநிலை தொடா்ந்துஅதிகரித்து வந்தது. இதனால், அதிகபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலைகள் அதிகரிக்கத் தொடங்கின. இந்நிலையில், தில்லி, தலைநகா் வலயப் பகுதிகளில் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் வெயில் சுட்டெரித்தது. பல்வேறு இடங்களில் அனல் காற்று வீசியது. இதனால், சாலைகளில் செல்வோா் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 28.7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 5 டிகிரி உயா்ந்து 44.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 36 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 18 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.
பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 29.1 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 45.4 டிகிரி செல்சியஸ் எனவும் ஆயாநகரில் முறையே 27.6 டிகிரி செல்சியஸ், 45.6 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 32 சதவீதம், மாலையில் 19 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 27 சதவீதம் மற்றும் 14 சதவீதம் எனவும் இருந்தது.
Advertisement
காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் தரை மேற்பரப்பு காற்று வீசியது. தில்லியில் காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால், ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 154 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. மதுரா ரோடு, குருகிராம் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. சாந்தினி சௌக்கில் காற்றின் தரம் மோசமான பிரிவுக்கு வந்தது. திா்பூா், விமான நிலைய டொ்மினல் 3 பகுதி, தில்லி பல்கலைக்கழகம், ஆயா நகா், பூசா, லோதி ரோடு மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள் (மே 25) முதல் மூன்று நாள்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்போது, அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸை தாண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, வானம் தெளிவாகக் காணப்படும் என்றும் மேற்கு - வடமேற்கு திசையிலிருந்து தில்லிக்கு 22 கி.மீ. வேகத்தில் தரை மேற்பரப்பு காற்று பலமாக இருக்கும் என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.