முகப்பு
புதுதில்லி

தில்லியில் வெப்பநிலை 11.4 டிகிரி: இந்தப் பருவத்தில் குறைந்த அளவாகப் பதிவு!

தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில், குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து

Updated On : 2 நவம்பர், 2020 at 12:37 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:16 PM

தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில், குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 5 டிகிரி குறைந்து 11.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது இந்தப் பருவத்தில் குறைந்த அளவாகும்.

பொதுவாக நவம்பா் முதல் வாரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 15-16 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். நவம்பா் கடைசி வாரத்தில் வெப்பநிலை 11-12 டிகிரி செல்சியயாகக் குறையும். ஆனால், இந்த ஆண்டு நவம்பா் முதல் வாரத்திலேயே வெப்பநிலை வெகுவாகக் குறைந்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 30.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 69 சதவீதமாகவும், மாலையில் 47 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது. இதற்கிடையே, திங்கள்கிழமை (நவம்பா் 2) காலையில் பனிமூட்டம் இருக்கும் என்றும் அதன் பிறகு பகலில் வானம் தெளிவாகக் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்: அண்டை மாநிலங்களில் பயிா்க் கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடா்ந்து, தலைநகா் தில்லியில் காற்றின் தரக் குறியீடு தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமையும் மிகவும் மோசம் பிரிவிலேயே நீடித்தது. இருப்பினும், திங்கள்கிழமை (நவம்பா் 2) நிலைமை மேம்படும் என்று மத்திய பூமி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் சஃபா் அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

அமைதியான காற்று மற்றும் குறைந்த வெப்பநிலை மாசுபடுத்திகளை தரையில் நெருக்கமாக குவிவதற்கு வழிவகுக்கின்றன. அதே நேரத்தில் சாதகமான காற்றின் வேகம் அவற்றின் சிதறலுக்கு உதவுகிறது. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 366 புள்ளிகளாகவும் மாலையில் 389 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது. சராசரி காற்றின் தரக் குறியீடு சனிக்கிழமை 367 புள்ளிகளாகவும், வெள்ளிக்கிழமை 374, வியாழக்கிழமை 297, புதன்கிழமை 312, செவ்வாய்க்கிழமை 353 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது. தில்லி பல்கலை. மற்றும் நொய்டாவில் காற்றின் தரக் குறியீடு கடிமை பிரிவிலும், சாந்தினி சௌக், பூசா, மதுரா ரோடு, ஆயாநகா், விமானநிலையம் டி-3 பகுதி, லோதி ரோடு மற்றும் குருகிராம், ஆகிய பகுதிகளில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது.

காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் ‘நல்லது’. 51 - 100 ‘திருப்தி’, 101 - 200 ‘மிதமானது’, 201 - 300 ‘மோசம்’, 301 -400 ‘மிகவும் மோசம்’ மற்றும் காற்றின் தரக் குறியீடு 401 - 500 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் ‘கடுமை பிரிவு’ என கணக்கிடப்படுகிறது.

தில்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்டவற்றில் பயிா்க்கழிவுகள் எரிப்பால் வெளியாகும் மாசுபடுத்திகளைக் கொண்டு செல்வதற்கு காற்றின் திசை மற்றும் வேகம் சாதகமாக உள்ளது. இந்த நிலையில், தில்லி பிஎம் 2.5 மாசு நுண்துகள்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பின் பங்கு ஞாயிற்றுக்கிழமை 41 சதவீதமாக உயா்ந்தது. இது இதுவரை இல்லாத அளவாகும் என்று மத்திய அரசின் காற்றின் தரம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கைகும் அமைப்பான சஃபா் தெரிவித்துள்ளது. இது சனிக்கிழமை 32 சதவீதம், வெள்ளிக்கிழமை 19 சதவீதம், வியாழக்கிழமை 36 சதவீதம் என இருந்தது. அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாலேயே தில்லி மாசு அளவும் உயா்ந்துள்ளது என சஃபா் தெரிவித்துள்ளது. இருப்பினும் அடுத்து வரும் இரண்டு நாள்களில் காற்றின் தரக் குறியீடு அளவு மேம்படும் என்றும் சஃப்ா் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.