எந்த இடத்தில் களமிறங்கி விளையாடவும் தயார்: துருவ் ஜுரெல்
எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட தயாராக இருப்பதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.
எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட தயாராக இருப்பதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் குவஹாட்டியில் நேற்று (ஏப்ரல் 10) நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது.
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 18 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி மற்றும் துருவ் ஜுரெல் அரைசதம் விளாசி அசத்தினர். வைபவ் சூர்யவன்ஷி 26 பந்துகளில் 78 ரன்களும், துருவ் ஜுரெல் 43 பந்துகளில் 81* ரன்களும் எடுத்தனர்.
Advertisement
இந்த நிலையில், எந்த இடத்தில் களமிறங்கி விளையாடினாலும் மகிழ்ச்சியே என துருவ் ஜுரெல் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: கடந்த ஆண்டு நான் 5 அல்லது 6-வது வீரராக களமிறங்கினேன். அணிக்காக போட்டியை வென்று கொடுக்க வேண்டும் என்பதே முக்கியம். அணி நிர்வாகம் என் மீது நம்பிக்கை வைத்து மூன்றாவது இடத்தில் என்னை களமிறக்கியது. மூன்றாவது இடம் என்பதை வெறும் நம்பராகவே பார்க்கிறேன்.
எனக்கு குறிப்பிட்ட நம்பரில் தான் களமிறங்குவேன் என்றெல்லாம் கிடையாது. என்னை 8 அல்லது 9-வது வீரராக களமிறக்கினால் கூட அணிக்காக மகிழ்ச்சியுடன் என்னுடைய பங்களிப்பை வழங்குவேன். அணியின் தேவைக்கேற்ப எந்த ஒரு இடத்திலும் களமிறங்கி விளையாடத் தயாராக இருக்கிறேன் என்றார்.