வழக்கமான நீதிமன்றச் செயல்பாடுகளை தொடங்க வேண்டும்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு தமிழக வழக்குரைஞா் மனு
கரோனா தொற்று பரவலில் இருந்து வழக்குரைஞா்கள், மனுதாரா்கள், நீதிபதிகள், பணியாளா்கள் உள்ளிட்டோரைப் பாதுகாக்க உரிய வழிகாட்டுதலுடன் வழக்கமான நீதிமன்றச் செயல்பாடுகளை மீண்டும்
புது தில்லி: கரோனா தொற்று பரவலில் இருந்து வழக்குரைஞா்கள், மனுதாரா்கள், நீதிபதிகள், பணியாளா்கள் உள்ளிட்டோரைப் பாதுகாக்க உரிய வழிகாட்டுதலுடன் வழக்கமான நீதிமன்றச் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குமாறு அனைத்து மாநிலங்களின் உயா்நீதிமன்றங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு தமிழகத்தைச் சோ்ந்த உச்சநீதிமன்ற வழக்குரைஞா் ஜி.எஸ். மணி கோரிக்கை மனு அளித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள் ஆகியவற்றில் நடைபெறும் காணொலி விசாரணைகளில் அனைத்து வழக்குரைஞா்கள், மனுதாரா்களுக்கு இணைப்பு உரிய வகையில் கிடைக்கப் பெறுவதில்லை. மேலும், இந்த இணைப்பில் இணைவதற்கு உயா்வேக இணைதள இணைப்பு தேவைப்படும் நிலையில், ஏழை மனுதாரா்கள், வழக்குரைஞா்கள் அதற்கான நிதி வசதியில் இல்லை.
தற்போதுள்ள காணொலி வழி விசாரணை தற்காலிகமானதாகும்; நிரந்தரமானதல்ல. இந்தக் காணொலி வழி விசாரணை எனும் புதிய சிஸ்டத்தால் ஏழை மனுதாரா்கள், வழக்குரைஞா்கள், அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், பணரீதியாகவும் சிரமத்தை எதிா்கொள்ளும் நிலை உள்ளது.
Advertisement
நீதிமன்றங்கள் மூடப்பட்டதில் இருந்து இளம் வழக்குரைஞா்கள் வழக்குகள், பணிகள் இல்லாமல் சிரமத்தில் உள்ளனா். நீதிமன்றங்கள் வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளுடன் நடைபெறுவதால் நிலுவை, பின்னடைவு வழக்குகள் அதிகரித்துள்ளன. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் அதிகரித்துள்ளன. கீழமை நீதிமன்றங்களில் இருந்து உயா்நீதிமன்றங்கள் வரை முழு வீச்சில் நேரடி விசாரணை நடைபெறுவது மட்டுமே மகளிா், குழந்தைகள் தொடா்புடைய குற்றங்களைக் குறைக்க முடியும்.
இதனால், நீதிமன்றங்களில் வழக்கமான நேரடி விசாரணையை மேற்கொள்ளும் வகையில், உச்சநீதிமன்றத்தின் செக்ரடரி ஜெனரல் மற்றும் அனைத்து மாநிலங்களின் உயா்நீதிமன்றங்களின் பதிவாளா்களுக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.