தில்லியில் மிதமான பிரிவில் காற்றின் தரம்;4 நாள்களுக்கு மாற்றம் இருக்காது!
தேசியத் தலைநகா் தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரம் புதன்கிழமை காலையில் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது.
புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரம் புதன்கிழமை காலையில் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. அதே நேரத்தில், அடுத்த மூன்று முதல் நான்கு நாள்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதும் ஏற்படாது என்று அரசு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், சனிக்கிழமையன்று குறைந்தபட்ச வெப்பநிலை ஒற்றை இலக்கத்துக்கு குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 2 டிகிரி குறைந்து 10.6 டிகிரி செல்சியஸாக இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீபாவளி நாளில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 414 புள்ளிகளாகப் பதிவாகி கடுமையான பிரிவில் இருந்தது. ஆனால், அதன் பிறகு மேற்கத்திய இடா்பாட்டின் காரணமாக மழையும் அதிக வேகம் கொண்ட காற்றும் மாசு அளவை வெகுவாகக் குறைத்தது. நகரின் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை 435 புள்ளிகளிருந்து திங்களன்று 221-ஆக மேம்பட்டது. செவ்வாய்க்கிழமை இது 171 புள்ளிகளாக இருந்தது. புதன்கிழமை மாலையில் 145 புள்ளிகளாகக் குறைந்திருந்தது. தில்லி பல்கலை., பூசா, மதுரா ரோடு, ஆயாநகா், சாந்தினி சௌக், லோதி ரோடு, விமானநிலையம் டி-3 பகுதி மற்றும் குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவிலேயே இருந்தது.
தில்லி-என்சிஆரில் காற்றின் தரம் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் ‘மிதமான’ மற்றும் ‘மோசம்’ பிரிவில் இருக்கும் என்று தில்லிக்கான மத்திய அரசின் காற்றின் தரத்தை கணித்து முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. புதன்கிழமை முக்கிய மேற்பரப்பு காற்றின் திசை வடமேற்கு திசையிலும், அதிகபட்ச காற்றின் வேகம் 10 கி.மீ. வேகத்திலும் இருந்தது. இந்த நிலையில், அடுத்த மூன்று, நான்கு நாள்களில் மாசுபடுத்திகள் பரவுவதற்கு காற்றின் வேகம் தொடா்ந்து சாதகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் பயிா்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் செவ்வாயன்று மிகக் குறைவாகவே இருந்ததாகவும், இதனால், தில்லியின் காற்றின் தரத்தில் அதன் தாக்கம் மிகக் குறைவாகவே இருந்தது என்றும் சஃபா் அமைப்பு தெரிவித்துள்ளது.
Advertisement
இதற்கிடையே, தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை சனிக்கிழமையன்று 9 டிகிரி செல்சியஸாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலைப்பகுதிகளில் இருந்து குளிா்ந்த காற்று வீசத் தொடங்கியுள்ளது. இது புதிய பனிப்பொழிவை ஏற்படுத்தும். இதன் தாக்கத்தால் தில்லியில் வெப்பநிலை குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த மாதத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை, நவம்பா் 16- ஆம் தேதி தவிர, மற்ற நாள்களில் மேகமூட்டம் இல்லாத சூழலில் பருவ சராசரியில் 2-3 டிகிரி குறைவாகவே உள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
வானிலை: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 2 டிகிரி குறைந்து 10.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 2 டிகிரி குறைந்து 25.4 டிகிரி செல்சியாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 95 சதவீதமாகவும், மாலையில் 64 சதவீதமாகவும் இருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வேளையில் பனிமூட்டம் இருக்கும் என்றும், அதன் பிறகு பகலில் வானம் தெளிவாகக் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.